பதிவு செய்த நாள்
16
மே
2019
03:05
திருத்தணி: திருத்தணி, முருகன் மலைக்கோவிலில் இருந்து, வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக, 6.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உருவாக்கப்பட உள்ள புதிய தார்ச்சாலை பணி, ஆறு மாதங்களுக்கு மேலாக, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருத்தணி, முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். ஆண்டுதோறும், ஆடிக்கிருத்திகை, டிச., 31ம் தேதி படித் திருவிழா, பங்குனி உத்திரம், ஆடிப்பூரம் மற்றும் மாசி பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய விழாக்களில், லட்சக்கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு வாகனங்களில் வந்துச் செல்கின்றனர். தற்போது, அனைத்து வாகனங்களும் மலைக்கோவிலுக்கு ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரே தார்ச்சாலை உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதையடுத்து, பக்தர்களின் நலன் கருதி, மலைக்கோவிலில் இருந்து, வாகனங்கள் இறங்குவதற்கு, கோவில் நிர்வாகம் சார்பாக, தனியாக, கடந்தாண்டு மார்ச் மாதத்தில், தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது.இந்த மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றுவதற்கு, 6.80 கோடி ரூபாய் என, திட்ட மதிப்பீடு செய்து, ஹிந்து அறநிலையத் துறை ஆணையரின் அனுமதி மற்றும் அரசாணைக்காக, அனுப்பி வைக்கப்பட்டு, நான்கு மாதங்கள் மேல் ஆகிறது.
இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மலைக்கோவிலில் இருந்து, இறங்கும் மண் சாலையை, நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, தரம் குறித்தும் அறிக்கை தயார் செய்து தரும்படி, அவர்களுக்கு இரண்டு மாதம் முன், பரிந்துரைக் கடிதம் அனுப்பி வைத்துஉள்ளோம்.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அறிக்கையை எங்கள் ஆணையருக்கு அனுப்பி, உத்தரவு கிடைத்ததும், மொத்தம், 7 மீட்டர் அகலத்தில், 1,480 மீட்டர் நீளத்திற்கு தார்ச் சாலை அமைத்து, வாகனங்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.