பதிவு செய்த நாள்
20
மே
2019
01:05
கிருஷ்ணகிரி:வட்டெழுத்துடன் கூடிய, 1,200 ஆண்டு பழமையான நடுகல், அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணத்தை அடுத்த, சாப்பரம், பஞ்., பனகமுட்லு கிராமத்தில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர். முரளி என்பவரின் நிலத்தில், 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வட்டெழுத்துடன் கூடிய நடுகல்கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கூறியதாவது:இந்த நடுகல்லில், ஒரு கையில் வாள், மறு கையில் வில்லுடன் வீரன் ஒருவன் போரிடுவது போல் உள்ளது. மார்பின் கீழ் பகுதியில், அம்பு பட்டு இறந்துள்ளான். போரில் இறந்ததன் நினைவாக, இக்கல்எடுக்கப்பட்டுள்ளது.அவன் மனைவியும் உடன்கட்டை ஏறியுள்ளார். இந்த வழக்கம், எட்டாம் நுாற்றாண்டில் இருந்ததற்கான சான்றாகவும் கொள்ளலாம். மாவட்டத்தில் கிடைத்த மிக பழமையான நடுகல்.இவ்வாறு அவர் கூறினார்.நடுகல்லை, அருங்காட்சியத்துக்கு நில உரிமையாளர் அளித்தார்.