பதிவு செய்த நாள்
15
மார்
2012
11:03
சரவணம்பட்டி : கோவை சரவணம்பட்டியில் உள்ள, கவுமார மடாலயத்தில், கஜபூஜை வெள்ளி விழாவை முன்னிட்டு, 108 கோபூஜை, 1008 திரு விளக்கு வழிபாடுடன், நான்கு நாள் விழா நடக்கிறது. சரவணம்பட்டியில் கவுமார மடாலயத்தில், 25 ஆண்டுகளுக்கு முன் 108 யானைகள், 108 கலசங்களில் விநாயகர், 108 வேள்வி குண்டங்களுடன் கஜபூஜை நடந்தது. இதை நினைவு கூர்ந்து, மீண்டும் இதுபோன்ற பூஜையை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
உலக நலன் கருதியும், மக்களின் வாழ்வு செழிப்படையவும் நடக்கும் இந்த பூஜையை, வரும் 22 முதல் 25ம் தேதி வரை , நான்கு நாள் விழா நடத்த முடிவு செய்துள்ளனர். யானைகளை வைத்து கஜபூஜை, 108 பசுக்களை நிறுத்தி பசுத்தாய் வழிபாடு, 1008 திருவிளக்கு வழிபாடு,63 நாயன்மார்களை எழுந்தருளிவித்தல், சுந்தரசுவாமிகள் சிலை திறப்பு விழா உள்பட, பல்வேறு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட உள்ளன. வரும் 22ல்,மாலை 4.00 மணிக்கு, சமய இலக்கிய நூல் வெளியீட்டுவிழாவுடன், நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. இதில்,மடாலய புத்தக வெளியீடுகள் நடக்க உள்ளன. சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை தாங்க உள்ளார். சிறப்பு வேள்விக்காக அமைக்கப்பட்டுள்ள உலகப் பெருவேள்வி மண்டலத்தில், இந்தவிழாக்கள் நடக்கின்றன. 23ம் தேதிகாலை 9.00 மணிக்கு மடாலய பள்ளிமாணவர்கள், பெரியபுராணம், பக்தமானமியம், நாடகங்கள், திமுமுறை இன்னிசை விழா நடத்துகின்றனர்.
சமய இலக்கிய கருத்தரங்கு காலை 10.00 முதல் பகல் 1.00 மணி வரை நடக்கின்றன. மதுரை காமராஜ் பல்கலையில் முன்னாள் பேராசிரியர் வேங்கடராமன் தலைமை வகிக்கிறார். மாலை 6.00 மணிக்கு 1008 திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. அறவழிகாட்டும் தமிழக துறவியர் மாநாடு, 24ம் தேதி காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. முதல் அமர்வுக்கு பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள் தலைமை வகிக்கிறார். பழனி சாது சண்முக அடிகள்தொடக்கவுரையாற்றுகிறார். சக்தி குழுமங்களின் தலைவர் மகாலிங்கம் மகிழ்வுரையாற்றுகிறார். இரண்டாம் அமர்வுக்கு, சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகிக்கிறார். முத்துசிவராமசாமி, சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்கின்றனர். மாலை7.00 மணிக்கு சீர்காழி சிவசிதம்பரம் இசை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 25ம் தேதி, யானை,108 பசுக்கள் பூஜை காலை 6.00 மணிக்கு நடக்கிறது. காலை 9.00 மணிக்கு அறுபத்து மூவர் நீராட்டு நிகழ்ச்சிக்கு, பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகிக்கிறார். சுந்தரசுவாமிகள் சிலையை சிவஞான பாலய சுவாமிகள் திறந்து வைக்கிறார்.