பதிவு செய்த நாள்
25
ஜூன்
2019
04:06
‘உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பாரபட்சம் பாராமல் அனைத்து உயிர்களுக்கும் நாள் குறித்து, தன், தூதர் படைத்துணையுடன் அவைகளை வலுக்கட்டாயமாகக் கூட்டிச் செல்லும் அந்த யமதர்மனை நினைத்தாலே உடல் படபடக்கிறது, அல்லவா? மரண பயம் மனதை விட்டு அகலவும், அசாதாரண இறப்பு சம்பவிக்காமல் அமைதியான மரணம் நிகழவும், ‘புண்ணிய மித்திரன்’ என்றழைக்கப்படும் யமனைத் தவறாமல் வழிபட வேண்டிய நாள் ஐப்பசி தேய்பிறை திரயோதசி திதியாகும். ஆம்... தீபாவளிக்கு முந்தைய நாள் திரியோதசி அன்று மாலை வேளையில், ‘வீட்டுக்கு வெளியே தலைவாசல் அருகிலோ, அல்லது வீட்டிற்கு மேல் ஓர் உயரமான இடத்திலோ, தெற்குத் திசை நோக்கி, கோதுமைமாவு அகலில், தாமரைத்திரி கொண்டு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட, முன்னோர்களின் ஆசியும், வம்ச விருத்தியும், யமபயமும் அறவே நீங்கும்’ என்பது பெரியோர் வாக்கு.
சிலசமயம் அகால மரணம் நிகழக்கூடிய நிலையை ஏற்படுத்தும் காரணியாகத் தாமஸ குணம் விளங்குகிறது. கோதுமை மாவு தாமஸ குணத்தைக் கட்டுப்படுத்த வல்லது. அதனால்தான் அது உபயோகப்படுத்தப்படுகிறது. தெற்குத் திசை பார்த்து விளக்கேற்றுவது இன்றைய தினத்துக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் மறக்கக் கூடாது. பித்ருபட்சத்தின் போது பூமிக்கு வரும் முன்னோர்களின் ஆன்மாக்கள் தங்கள் சந்ததியினரிடமிருந்து எள், தண்ணீர் மற்றும் பிண்டதானம் பெற்று மறுபடியும் பித்ருலோகம் திரும்புவது, இந்த ஐப்பசி அமாவாசையில் தான். அவர்களுக்கு ஒளிகாட்டி, வழி அனுப்பும் பொருட்டுத் தீபமேற்றுவதுதான் யமதீபமாகும்.
“ஓம் யமாய நம: யமாய தர்மராஜாய ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத ஷயாய ச
ஔதும்பராய த்த்னாய நீலாய பரமேஷ்டினே
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப் தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:
என்ற சுலோகத்தை சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்றத் தகுந்த நேரம்: மாலை 5.29 முதல் 6:48 க்குள். ‘மரணபயத்தை மனதிலிருந்து விரட்ட மூன்று உபாயங்கள் இருக்கின்றன.’ என்று கதோபநிஷத்தில் சிறுவன் நசிகேதனுக்கு யமன்உபதேசிக்கிறான். “வாழ்க்கை என்பது ஆற்றில் பிரதிபலிக்கும் ஆலமரம்’ போன்றது. அதன் வேர்ப்பகுதி மேலேயும், கிளைகள் நீரிலும் இருப்பது போல் தலைகீழாகத் தோற்றமளிக்கும். (மேலும் பார்க்க கீதை 15:15). நமது பூலோக வாழ்க்கையும் அதுபோல் ஒரு பிரதி பிம்பமே தவிர உண்மைத் தோற்றமல்ல. துயரமான விஷயம் என்பது பிறப்புதான். மரணம் அல்ல. மரண பயம் முதலிய அனைத்து எதிர்மறை உணர்வுகளையும் வாழ்வின் அன்றாட சாதாரண நிகழ்வாக ஏற்றுக்கொண்டு, மனதை முழுவதுமாய் அந்த ‘அலக் நிரஞ்சன்’ மீது நிலைநிறுத்த வேண்டும்.” என்கிறான்.
மரணம் எவ்வழியில், எந்த ரூபத்தில் வந்தாலும் நம்மை ஆட்கொள்ள பெம்மான் இருக்கிறான். அவன் திருவடிகளைச் சரணடைவதே ஒரே வழி. அந்திமக்காலம் நெருங்குவதைக் காலதேவன் ஏதோவொரு விதத்தில் நமக்கு உணர்த்துகிறான். ஆனால் நாம்தான் அதைப் புரிந்துகொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டுப் பின்னால் வருந்துகிறோம். நிதர் சனத்தைப் பார்க்க இயலாத குருடர்களாக இருந்து விடுகிறோம்.
இதை விளக்கும் ஒரு சம்பவம் ஓர் உருவகக் கதையாகப் ப்ரஹ தாரண்யகா உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளது.
வெவ்வேறு மனிதர்களை பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பயப்படுவதுண்டு. ஆனால் பொதுவாக அனைவரையும் பயம் கொள்ளாச் செய்வது காலனின் வருகைதான். உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதித்திருக்கும்போது இந்நினைவு எழுவது நிச்சயம். இம்மாதிரி மன உளைச்சல் தனக்கு ஏற்படக் கூடாது என்று நினைத்தான். இறைபக்தி மிக்க அமிர்தன் என்பவன்.
யமபயம் நீங்க, ஆன்றோர்களின் அறிவுரையை ஏற்று யமனை நோக்கித் தவம் மேற்கொண்டான். அதில் மகிழ்வுற்ற யமனும் அவனுக்குத் தரிசனமளித்துக் கூறினான். “மானுடனே! உயிர் பிரியும் நிலையிலுள்ள ஜீவன்கள் முன்போ, இறந்தவர்களின் ஆன்மாவுக்கோதான் என் தரிசனம் கிட்டும். ஆனால் உன் தவத்தை மெச்சி உனக்காகப் பிரத்யேகமாக வந்துள்÷ன். உன் விருப்பம் என்னவென்று சொல், அளிக்கிறேன்!” என்று.
“தர்மராஜா! உன் கருணையே, கருணை. நான் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். என் காலம் முடிந்து உன் தூதர்கள் என்னை இழுத்துக் கொண்டு போகப் போவதை முன் கூட்டியே எனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். சித்ரகுப்தரின் மடல் என்னிடம் எப்படியாவது வந்து சேரும்படிச் செய்ய வேண்டும். குடும்பத்துக்கு வசதி செய்து கொடுக்கக் கால அவகாசம் வேண்டாமா? போகிற வழிக்குப் புண்ணியம் சேர்க்க, கிருஷ்ண தியானம் மற்றும் பல ஆன்மிகக் காரியங்களைச் செய்து முடிக்க வேண்டுமல்லவா?”
“ததாஸ்து! அப்படியே ஆகட்டும் அமிர்தா, ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள். நான் தெரிவிக்கும் சமாச்சாரத்தை அலட்சியப்படுத்தி விடாதே. அதன் பின்விளைவுகள் அசாதாரணமாய் இருக்கும்!” என்ற யமதர்மன் அங்கிருந்து மறைந்தான்.
அதற்கு ஒப்புக்கொண்ட அமிர்தனின் மகிழ்ச்சிக்கு ஓர் அளவேயில்லை. யம பயம் ஓரளவு மனதிலிருந்து அகன்று விட்டதை உணர்ந்தவன் ஆன்மிக ஈடுபாடுகளிலிருந்து ஒதுங்கினான். இன்பக் களியாட்டங்களில் மூழ்கித் திளைத்தான். ஆண்டுகள் உருண்டோடின. முதலில் அவன் தலைமுடி நரைக்கவும், கொட்டவும் ஆரம்பித்தது. காலனிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை என்பது அவனுக்குத் தெம்பு அளித்தது. நண்பர்கள் பக்தி மார்க்கத்துக்குத் திரும்ப அழைத்தது விழலுக்கு இறைத்த நீராக ஆயிற்று.
மேலும் சில ஆண்டுகள் கடந்து போக, அவனது பற்கள் உறுதியிழந்து, சொத்தையாகி, உடையத் தொடங்கின. அந்திமக் காலம் நெருங்கி விட்டது என்று பிறர் கேலி செய்ததை அவன் பொருட்படுத்தவில்லை. சுகபோகத்தில் திளைப்பதையும் நிறுத்தவுமில்லை. யமனிடமிருந்து தான் அது வரை ஒரு செய்தியும் வரவில்லையே.
இன்னும் சில வருடங்கள் கடக்க, கண்பார்வை மங்கியது, அவன் கவலைப்படவில்லை. பின்பு, வயது முதிர்ச்சியால் உடல் தளர்ந்து போக, கைத்தடியுடன் நடக்கலானான். அடுத்துப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானான். இப்போதும், நம்பிக்கை இழக்கவில்லை. இன்னும் தர்மராஜனிடமிருந்து ஓலை ஒன்றும் வராததே காரணம். மற்றவர்கள்தான் பயந்தார்களே தவிர, அவன், யமனும், சித்ரகுப்தனும் தன்னைப்பற்றி மறந்து விட்டார்கள்’ என்று மனதில் சிரித்துக் கொண்டான்! அந்த நினைப்பில் இருந்தவன்முன் திடீரென யமன் தோன்ற- திடுக்கிட்டுப் போனான்!
“தர்மராஜா! நீ கொடுத்த வாக்கை மீறி விட்டாய். உரிய அறிவிப்பைத் தராமல் இப்போது வந்து நிற்கிறாய். இது என்ன நியாயம்?” என்று வாய்க்குழறக் கேட்டான்.
“ஏ, மானுடா! சுகபோகத்தில் மூழ்கியிருந்த நீ, பக்தி மார்க்கத்தில் ஈடுபடவில்லை. நான் அனுப்பிய நான்கு செய்திகளையும் புறக்கணித்து விட்டாய் அல்லவா?
“தர்மதேவதையே! நான்கு மடல்களா அனுப்பினீர், எனக்கு ஒன்றுகூட வந்து சேரவில்லையே? இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் சில இருக்கின்றனவே, என்ன செய்வது?”
“அமிர்தா! நானும், சித்ரகுப்தனும் ஓலைச்சுவடியில் எழுதி அனுப்புவோம் என்று நினைத்தாயா, இல்லவேயில்லை! மாறுதல் அடையும் உன் உடற்பகுதிகளாலான எழுத்தாணியை வியர்வை, உதிரம், கண்ணீர் போன்ற மை தோய்த்து, உன் உடலாகிய ஓலைச் சுவடியில் எழுதி, காலச்சக்கரத் தூதுவன் மூலம் இதோ இப்படித்தான் தெரிவித்தோம்.
முதன் முதலில், உன் முடி நரைத்தது. அதன் பொருள் விளங்காமல் புறக்கணித்தாய். இரண்டாவதாக, உன் பற்கள் சொத்தையானதன் மூலம் தெரிவித்தோம். மூன்றாவதாக, கண்பார்வைக் கோளாறு வாயிலாக அணுகினோம். நான்காவதாக, பக்கவாதம் தாக்கச் செய்து உன் கவனத்தைத் திருப்ப முயன்றோம். அப்போதும் நீ கண்டுகொள்ளாமல் இருந்து விட்டாய், நான் என்ன செய்வது? இப்போது உன் காலம் முடிவுக்கு வரப்போவதால், எனக்கு விதித்துள்ள பணிப்படி உன் உயிரைக் கவர்ந்து செல்லும் பணியாளனாக வந்துள்ளேன். நண்பனாக, அல்ல!” எனக் கூறியவாறு, பாசக் கயிற்றை வீசி அமிர்தனை வளைத்துக் கொண்டான்!
சுற்றியிருந்தோர் அவன் வாயசைத்து ஏதோ பேச முயன்றதைத்தான் அதுவரைக் கண்டனரே ஒழிய, அங்கு நடந்தது வேறொன்றும் தெரியவில்லை! ‘அமிர்தன் கரையேறிவிட்டான்’ என்ற முடிவுக்கு வந்தனர்.
சுறுசுறுப்பாய் இருக்கும் இளம் வயதிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, காலதேவனின் எதிர்பாராத வரவை எதிர்கொள்ளும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடில், யம பயமே நம்மை செயலிழக்கச் செய்துவிடும். உடலில் ஏற்படும் மாறுதல்கள் யமன் கொடுக்கும் இரகசியக் குறியீடுகள். அவற்றை அலடசியப்படுத்தினால் யமனின் திடீர் வரவு அதிர்ச்சியளிக்கும். அதை அணைபோட்டுத் தடுக்க இருக்கும் ஒரே வழியை ஆதி சங்கரர் தனது “பஜகோவிந்த ”த்தில் இப்படிக் கூறுகிறார்;
“யம பயமும், மரணமும் தவிர்க்க முடியாதவைதான். ஆனால் ஒருவர் பகவத் கீதையை ஓரளவாவது படித்து. வாழ்வில் ஒருமுறையாவது கங்கை நீராடி, அந்த நீரைக் கொண்டு முராரியை ஆராதிப்பாரானால், யமனைப் பயமின்றி தைரியமுடன் எதிர்கொள்ளலாம்”