காஞ்சிப்பெரியவரை தரிசிக்க ஒரு பணக்கார தம்பதியர் விரும்பினர். அதற்காக சுவாமிகளுக்கு சமர்ப்பிக்க எலுமிச்சைமாலை தயாரிக்க எண்ணி, சந்தையில் 108 எலுமிச்சம்பழங்கள் வாங்கினர். அவற்றை தண்ணீரில் கழுவி மாலையாக தொடுக்கும் பணியை வீட்டு வேலைக்காரப் பெண்ணிடம் ஒப்படைத்தனர். அவள் மகாசுவாமிகள் மீது அளவற்ற பக்தி கொண்டவள். பழத்தை ஒவ்வொன்றாக நூலில் கோர்க்க ஆரம்பித்தாள். அப்போது சுவாமிகளைத் தவிர வேறு எதையும் அவள் சிந்திக்கவில்லை. மாலை தயாரானதும், அதை கண்களில் ஒற்றி பிரம்புக் கூடையில் வைத்தாள். அத்துடன் வாழைப்பழம், பூக்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்ட தம்பதியர் காஞ்சிபுரம் கிளம்பினர். பக்தர்களுடன் வரிசையில் காத்திருந்த அவர்கள் சுவாமிகளை தரிசித்து விட்டு, கூடையை சுவாமிகளின் முன் வைத்து நின்றனர். கூடையை உற்றுப் பார்த்த சுவாமிகள், எலுமிச்சை மாலையை மட்டும் எடுத்து கழுத்தில் அணிந்து கொண்டார். இந்த அற்புதக் காட்சியைக் கண்ட தம்பதியர் அவரது காலில் விழுந்து வணங்கினர்.
அவர்களுக்கு பழங்கள், குங்குமத்தை வழங்கினார் பெரியவர். பின் அவர்களை நிற்கச் சொல்லி மேலும் சிறிது குங்குமம் கொடுத்தார். “எலுமிச்சை மாலையை நேர்த்தியா தயார் பண்ணின அம்மாளுக்கு இந்தக் குங்குமத்தைக் கொடுங்கோ! அவருக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு’ என்றார். மனம் தூய்மையுடன் ஆத்மார்த்தமாகச் செய்யும் செயல்கள் வீண் போவதில்லை; சமைக்கும் ஏழைப்பெண்ணின் பக்திக்கும் கடவுளின் சன்னதியில் அங்கீகாரம் உண்டு என்பதை உணர்ந்த தம்பதியர் கண்கலங்கினர். - திருப்பூர் கிருஷ்ணன்