பதிவு செய்த நாள்
08
ஆக
2019
12:08
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் உட்பட, முக்கிய கோவில்களில் நேற்று, நிறை புத்தரிசி பூஜை நடந்தது. பக்தர்களுக்கு, நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
நாட்டில் விவசாயம் செழித்து, வளம் பெருகுவதற்காக, ஆண்டுதோறும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில், நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும்.இதன்படி கன்னியாகுமரி பகவதியம்மன், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, திக்குறிச்சி மகாதேவர், நாகராஜா உள்ளிட்ட முக்கிய கோவில்களில், நேற்று, நிறை புத்தரிசி பூஜைகள் நடத்தப்பட்டன. பகவதியம்மன் கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு, அபிஷேகத்தைத் தொடர்ந்து, நிறை புத்தரிசி பூஜை நடந்தது. முன்னதாக, திருக்கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான வயல்களில் இருந்து, நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, அவை, குமரி அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, மேள- தாளங்கள் முழங்க, ஊர்வலமாக, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு, நெற்கதிர்கள் எடுத்து வரப்பட்டன. அதன்பின், பக்தர்களுக்கு, அந்த நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.இந்த நெற்கதிர்களை வீட்டின் முன் கட்டி வைத்தால், வளம் செழிக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.