பதிவு செய்த நாள்
28
மார்
2012
11:03
சத்தியமங்கலம் :பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் நடப்பாண்டு குண்டம் விழா துவங்கியது.சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை குண்டம் விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு குண்டம் விழா, நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்று மாலை காட்டு பண்ணாரி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து பண்ணாரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜையை அடுத்து, காளிதிம்பம் கிராம பக்தர்கள் அம்மனிடம் பூ வரம் பெற்றனர். தொடர்ந்து சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம், புதூர் உள்ளிட்ட பரம்பரை அறங்காவலர்கள் தங்கள் கிராம பக்தர்களுடன் அம்மனிடம் பூ வரம் பெற்றனர். குண்டம் விழாவுக்கான பூவரம் பெறப்பட்டதன் மூலம், நடப்பாண்டு குண்டம் விழா, நேற்று முன்தினம் இரவு துவங்கியது.
நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் நடராஜன், பரம்பரை அறங்காவலர்கள் புரு÷ஷாத்தம்மன், ராஜப்பா, ராஜாமணிதங்கவேல், வீரப்பகவுடர், ராஜேந்திரன், புஷ்பலதா மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர். நேற்று இரவு நித்தியப்படி பூஜை முடிந்து, பண்ணாரி அம்மன் வீதி உலாவுக்காக சப்பரத்தில், சிக்கரசம்பாளையம் சென்றார். நாளை வியாழக்கிழமை காலை வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம் வழியாக இரவு தொட்டம்பாளையம் செல்கிறார். இரவு அங்குள்ள வேணுகோபால் ஸ்வாமி கோவிலில் தங்குகிறார். வரும் 30ம் தேதி காலை வெள்ளியம்பாளையம் புதூர் சென்று இரவு அக்கரைதத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில் தங்குகிறார். 31ம் தேதி உத்தண்டியூர், அய்யன்சாலை வழியாக ராமபுரம் சென்று, அங்கு ஏழைகளுக்கு அன்னதானம் நடக்கிறது.
இதையடுத்து தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர், திருவள்ளுவர் நகர் வழியாக சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வந்து அங்குள்ள தண்டுமாரியம்மன் கோவிலில் இரவு தங்குதல்.
ஏப்., 1ம் தேதி சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை, கடைவீதி, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் வீதிஉலா சென்று, இரவு சத்தியமங்கலம் வேணுகோபால் ஸ்வாமி கோவிலில் தங்குகிறார். 2ம் தேதி ரங்கசமுத்திரம், எஸ்.ஆர்.டி., கோணமூலை, காந்திநகர், திம்மையன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக புதிய எக்ஸ்டென்ஷன் வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து, அங்கு பக்தர்கள் தரிசனம் தந்த பிறகு, இரவு கோட்டுவீராம்பாளையம் சவுடேஸ்வரியம்மன் கோவிலில் தங்குகிறார். ஏப்., 3ம் தேதி பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, புதுகுய்யனூர், பசுவபாளையம், புதுபீர்கடவு, பட்டரமங்கலம், ராஜநகர் வழியாக இரவு பண்ணாரி கோவிலை வந்தடைகிறார். பின்னர் கம்பம்சாட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை, நித்தியப்படி பூஜை, நாள்தோறும் இரவு 7 மணிக்குமேல் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, பீனாச்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டம் நடக்கிறது. ஏப்., 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு குண்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 16ம் தேதி மறுபூஜையுடன் குண்டம் விழா நிறைவுபெறுகிறது.