’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்கிறார் திருநாவுக்கரசர். கடன் என்பதற்கு “கடமை” என்று பொருள் உண்டு. கடமை என்றால் என்ன என்பதை மகாகவி பாரதியார் விளக்குகிறார். எவனுக்கு தன்னை ஆளத் தெரிகிறதோ அவனால் இந்த மண்ணை ஆள முடியும். தன்னை ஆள்வது என்பது மனதை வசப்படுத்துதல் ஆகும். புத்தி நேர்மறையாக செயல்பட நினைக்கும் போது மனம் எதிர்மறையாக சிந்திப்பது இயல்பு. ’கோயிலுக்குச் செல்லலாம் என நினைத்தால் மழை வரும் போலிருக்குதே, தலை வலிக்கிற மாதிரி இருக்குதே?’ என்பது போன்ற செய்திகளைச் சொல்லி மனம் செயல்படவிடாமல் தடுக்கும். புத்தி சொல்வதை செயல்படுத்த மனம் ஒத்துழைத்தால் மனம் கட்டுக்குள் இருக்கிறது என்பது பொருள். ’தன்னைக் கட்டுக்குள் வைத்திருத்தலே வீரம்’ என்கிறார் அவ்வையார்.
மனம் நம் வசமானால், மற்றவர் துன்பத்தை நம்மால் எளிதாக போக்க முடியும். ”பிறர் துன்பத்தை தன் துன்பமாக கருதி அவர்களுக்கு உதவுவதே அறிவாகும்” என்கிறார் திருவள்ளுவர். மனதில் அன்பு அதிகரித்தால் பிறருக்கு உதவுவது என்பது இயல்பாக நடக்கும். நம்மால் முடிந்த சிறிய உதவிகளை பிறருக்குச் செய்தாலும் போதும். சாலையைக் கடக்க முடியாத முதியவருக்கு உதவலாம். பாரம் ஏற்றிச் செல்லும் வண்டிகளுக்கு கை கொடுக்கலாம். விக்கல் எடுத்தால் தண்ணீர் கொடுக்கலாம். பேருந்தில், ரயிலில் சுமைகளுடன் வருவோரிடம் பையை வாங்கி படியில் ஏற உதவலாம். மனித நேயத்துடன் உதவிக்கரம் நீட்டி மற்றவர் முகத்தில் புன்னகையை உருவாக்கலாம். உதவி செய்ய இயலாதவர்கள் கடவுளிடம் பிறருக்காக வழிபாடு செய்யலாம். “யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே” என்கிறார் திருமூலர்.
அரசு அலுவலகம், வங்கி, பொதுத்துறை நிறுவனங்களில் சாதாரண மனிதர்களை வரவேற்று ’ உங்களுக்கு என்ன வேண்டும்’ என பணியாளர்கள் கேட்ட அனுபவம் உண்டா? சொல்லுங்கள். எதிரியைப் பார்ப்பது போல காட்டமாக செயல்படுவோரே உலகில் பலர் இருக்கின்றனர். புன்னகையே அன்பின் அடையாளம். அதுவே ஆறுதல் அளிக்கும் மொழி. குறைந்தபட்சம் அனைவரும் நலமாக வாழ பிரார்த்தனையாவது செய்வோம். இதற்கு பணம் தேவையில்லை. மனம் இருந்தால் போதும். உலகை எல்லாம் காக்கும் ஒருவரான கடவுளை நம்பிக்கையுடன் வழிபடுங்கள் என்கிறார் மகாகவி பாரதியார். அவர் காட்டிய வழிகளை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ்வோம். உலகை வாழ வைப்போம் வாரீர். கடமையாவன தன்னைக் கட்டுதல்பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.