திருப்புத்துார் : பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப்பெருவிழா இன்று 24ம் தேதிகொடியேற்றத்துடன் துவங்குகிறது.இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். இன்று 24ம் தேதி காலை 9:00 மணிக்கு பூர்வாங்க பூஜை துவங்கும்.
மூஷிக கொடி படத்திற்கு சிறப்பு பூஜை நடந்து கோயில் வலம் வருவர்கொடி மரத்தினருகே அங்குசத்தேவர், சண்டிகேஸ்வரர், கொடி படம் எழுந்தருளலும் நடைபெறும். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடந்து கொடியேற்றம் நடைபெறும்.
இரவில் மூஷிக வாகனத்தில் உற்ஸவ விநாயகர் திருவீதி வலம் வருவார். தினசரி இரவில் பல்வேறு வாகனங்களில் விநாயகர் திருவீதி வலம் வருவார். இரண்டாம் நாள் முதல் எட்டாம் நாள் வரை காலை 9:30 மணிக்கு வெள்ளிக்கேடகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 6ம் திருநாளை முன்னிட்டு ஆக.29 மாலை கஜமுக சூரசம்ஹாரமும், 9ம் திருநாளை முன்னிட்டு செப் 1ல் மாலை தேரோட்டமும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்.2 காலை தீர்த்தவாரி, மதியம் முக்கூரணி மோதகம் படையல், இரவில் பஞ்சமூர்த்தி திருவீதி உலாவுடன் நிறைவடையும்.