நத்தம்: நத்தம் கோவில்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட செண்பகவல்லி அம்பிகா சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் புதிய தேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது.
இக்கோயிலின் புதிய தேர் கட்டுமானத்திற்காக 2 ஆண்டுகளுக்கு முன் அறநிலையத்துறை சார்பில் ரூ.5 லட்சம் மற்றும் பழநி பால தண்டபாணி கோயில் சார்பாக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நன்கொடையாளர்களிடம் நிதி திரட்டப்பட்டு பணிகள் தொடர்ந்தன. பணிகள் முடிந்த நிலையில், புதிய தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. மேளதாளம் முழங்க திருத்தேரை ஏராளமான பக்தர்கள் பிடித்து இழுத்தனர். திருத்தேர் கோயிலிலிருந்து கிளம்பி அக்ரஹாரம், நான்கு பிரகார வீதிகள், பெருமாள் கோயில் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். நத்தம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.