பதிவு செய்த நாள்
10
அக்
2019
03:10
வீரபாண்டி: கோண பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத சனிதோறும், ஆட்டையாம்பட்டி, கோண பெருமாள் கோவிலில், திருக்கோடி தீபமேற்றி, சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது.
அதையொட்டி, திருக்கல்யாண உற்சவம், நேற்று 9ம் தேதி நடந்தது. அதற்காக, கோவில் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோணபெருமாள் உற்சவர் சிலைகளுக்கு, திருமஞ்சனம் நடந்தது.
மாலை, வேதபாராயணம், பிரபந்த பாராயணத்துடன், யாக சாலை பூஜை நடந்தது. அதில் வைத்து பூஜித்த திருமாங்கல்யம், காப்பு கயிறுகளை, பட்டாச்சாரியார்கள், தேவியர்கள், பெருமாள் கைகளில் கட்டி, திருமண சடங்குகளை தொடங்கினர். தொடர்ந்து, ’கோவிந்தா’ கோஷம் முழங்க, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். வரும், 12ல், புரட்டாசி நான்காவது சனியில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோண பெருமாள் உற்சவர், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா வரச்செய்வர்.