காரியாபட்டி: திருவள்ளுவருக்கு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பி.புதுப்பட்டியில் கோயில் எழுப்பப்பட்டு நான்கு தலைமுறையாக வழிபாடு நடக்கிறது.உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு பி.புதுப்பட்டியில் கோயில் உள்ளது. தினமும் வழிபாடுடன் திருவிழாவும் கொண்டாடி வருகின்றனர் கிராமத்தினர்.
பூஜாரி சங்கரநாராயணன் கூறியதாவது: திருவள்ளுவருக்கு கோயில் கட்டி நான்கு தலைமுறையாக குருபூஜை நடத்துகிறோம். திருவள்ளுவர் தினத்தை எளிமையாக கொண்டாடுவோம். அவர் முக்தி பெற்ற மாசி பவுர்ணமி அன்று உத்திர நட்சத்திரத்தில் இரவில் பூஜைகள் நடத்தி, 2 நாள் திருவிழா கொண்டாடுவோம். 2015ல் கோபுரம் எழுப்பி தருமபுரம் ஆதினம் தலைமையில் கும்பாபிேஷகம் நடத்தினோம். நிறைவான கருத்துக்களை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும்படி உருவாக்கியவர். அவர் எங்களுக்கு மட்டும் சொந்தம் கிடையாது. அனைவருக்கும் சொந்தமானவர், என்றார். கோயில் நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் கூறுகையில், ‘‘தினமும் பூஜை செய்கிறோம். திருவிழாவில் முளைப்பாரி, சங்கு, விளக்கு பூஜைகள், கலை நிகழ்ச்சி, மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டிகள் நடத்துகிறோம். வெளி ஊர்களில் வசிக்கும் எங்கள் உறவினர்கள் திருவிழா நேரத்தில் ஒன்றுகூடுவோம்,’’ என்றார்.