அருப்புக்கோட்டை: இன்றை நவீன உலகில் அவசர வாழ்க்கையில் மனம் நிம்மதியை தேடி அலைகிறது. நிம்மதிக்கான ஒரே இடம் கோயில். அங்கு சென்று கடவுளை தியானிக்கும் போது மனம் லேசாகிறது. பிரச்னைகள் வந்தால் மட்டும் கோயிலை தேடி செல்வது சிலர்.
தினமும் கோயிலுக்கு சென்று வருவது பலர். ஓய்வு காலத்தில் கோயிலே கதி என்று இருப்பவர்களும் உள்ளனர். இவர்கள் மற்றவர்களின் நலனுக்காகவும். உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகின்றனர். அந்தவகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மக்கள் நலமாக இருக்கவும், உலக நன்மைக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ‘முற்றோதல்’ பாராயணம் நடக்கிறது.
பன்னிருதிருமுறைகளை ஒரே நாளில் ஓதுவதே முற்றோதல். பன்னிருதிருமுறைகளில் உள்ள தேவாரம், திருவாசகம் பாடல்களை ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை காலை 8:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை விரதமிருந்து சிவ பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர். வயது வித்தியாசமின்றி பெரியவர்கள் முதல் சிறியவர்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.