சபரிமலை : அதிக அளவில் பிரசாதம் வாங்கி கொண்டு மலை இறங்குவதில் உள்ள பக்தர்களின் சிரமத்தை குறைக்க பம்பையில் அப்பம் அவரணை பிரசாத கவுன்டர் திறக்கப்பட்டது.
சபரிமலையில் முக்கிய பிரசாதமான அப்பம் மற்றும் அரவணை ஆரம்பத்தில் 18-ம் படியின் வலது பக்கம் அமைக்கப்பட்டிருந்த கவுன்டரில் மட்டுமே விற்பனையானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாளிகைப்புறம் நடைப்பந்தல் அருகேயும் பழைய அன்னதான மண்டத்திலும் பிரசாத கவுன்டர்கள் திறக்கப்பட்டது. மண்டல மகர சீசனில் சன்னிதானத்தில் மட்டும் மூன்று இடங்களில் பிரசாத கவுன்டர் செயல்படுகிறது.புதிய தலைவராக பொறுபேற்ற வாசு தலைமையில் நடந்த தேவசம்போர்டு கூட்டத்தில் பக்தர்களின் சிரமத்தை குறைக்க பம்பையிலும் சபரிமலை பிரசாத கவுன்டர் திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. சபரிமலை பிரசாத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் என்று எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பம்பையில் அப்பல்லோ மருத்துவமனை அருகே தேவசம்போர்டு கட்டடத்தின் முதல் மாடியில் பம்பை கணபதி கோயில் மேல்சாந்தி ஸ்ரீதரன் நம்பூதிரி குத்துவிளக்கேற்றி பிரசாத கவுன்டரை திறந்து வைத்தார். 30 தேவசம்போர்டு ஊழியர்களும் 12 தனலெட்சுமி பேங்க் ஊழியர்களும் இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்த கவுன்டர் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.