சபரிமலையில் டிச. 27ல் மண்டல பூஜை: 23ல் தங்க அங்கி புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2019 10:12
சபரிமலை: சபரிமலையில் டிச. 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி 23-ம் தேதி புறப்படுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு பூஜை தான் மண்டல பூஜை. இந்த நாளில் மூலவருக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973-ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். 450 பவுன் எடை கொண்ட இந்த கவசம் மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்.
பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரி ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபாடு நடத்துவர். டிச.,23-ல் ஆரன்முளாவில் இருந்து புறப்படும் பவனி அன்று இரவு ஓமல்லுார் பகவதி கோயிலிலும், 24-ம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், 25-ம் தேதி பெருநாடு சாஸ்தா கோயிலிலும் வைக்கப்படும். 6-ம் தேதி மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும் இந்த அங்கி மாலை 3:00 மணிக்கு தலைச்சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும். மாலை 6:30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். மறுநாள் மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும்.