மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2020 10:01
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி தங்கக்கொடிமரத்தில் தெப்பத்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை 10:50 மணிக்கு நடந்தது.
பிப்.,8ல் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினர். பிப்.,8 வரை பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி சித்திரை வீதிகளில் உலா வருவர். பிப்.,8 அன்று அதிகாலை கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளம் செல்கின்றனர். தெப்பத்தில் காலை 8:35 முதல் 8:59 மணிக்குள் எழுந்தருளி, பக்தர்கள் வடம் பிடிக்க இருமுறை வலம் வருகின்றனர். இரவில் ஒரு முறை தெப்பம் சுற்றி வரும்.தெப்ப உற்ஸவம் முடிந்து அம்மனும், சுவாமியும் இரவு கோயிலுக்கு சேரும் வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். அன்று ஆயிரங்கால் மண்டபத்தில் காலை 7:00 முதல் பகல் 12:30 மணி, பகல் 3:00 முதல் இரவு 7:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.