பக்தர் ஒருவருக்கு ஒன்று மாற்றி ஒன்று என பல பிரச்னைகள் வந்தன. சரியான வேலை அமையவில்லை. பொருளாதார நெருக்கடி. குடும்பத்திலும் பிரச்னைகள். இதிலிருந்து மீள்வது எப்படி எனச் சிந்தித்த போது, காஞ்சி மகாபெரியவரின் நினைவு வரவே காஞ்சிபுரம் புறப்பட்டார். சுவாமிகளை நேரில் தரிசித்து தன் நிலைமையைச் சொல்லி முறையிட்டார். ‘ என்னை பிரச்னையில் இருந்து நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்!` என்று சுவாமிகளின் பாதம் பணிந்தார். ‘‘உன் துன்பம் எல்லாம் தீர வழியிருக்கு. கொஞ்ச நேரம் பொறுமையா காத்திரு. உன்னைக் கூப்பிடுகிறேன்.’’ என்றார். நம்பிக்கையுடன் ஓரிடத்தில் அமர்ந்தார் பக்தர். அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு ஆசியளித்த சுவாமிகள், மீண்டும் அருகில் அழைத்தார். ‘‘இவ்வளவு நேரம் பொறுமையா உட்கார்ந்திருந்தாய் அல்லவா? அதுபோல தினமும் சற்று நேரம் பொறுமையுடன் உட்கார்ந்து பழகு. அப்போது ‘ராம... ராம...’ என்னும் திருநாமத்தைச் சொல்லிப் பழகு. ஏனோ தானோ...என்று உதடு ஜபிக்க, மனம் வேறொன்றை சிந்திக்கக் கூடாது. ராமர், ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து சொன்னால் எளிதாக மனம் ஒன்றுபடும்’’ என்றார். ‘‘அப்படி ஜபித்தால் என் கவலை தீருமா?’’ ஆர்வமுடன் கேட்டார் பக்தர். ‘‘நிச்சயமாக!’’ என்ற சுவாமிகள் அதை விளக்கவும் செய்தார். ‘‘ராமநாமம் உடல், மன நோய்களைத் தீர்க்கும் மாமருந்து. இதன் பெருமையை நம் தேசத்தந்தை காந்தி பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார். ராம நாமம் சொல்லும் இடத்திற்கு அனுமன் வருவார். கணவரை யார் அழைக்கிறார்கள் என்பதைக் காண சீதையும் அங்கிருப்பாள். ராமரை பூஜிக்கும் பரமேஸ்வரனும், அவரது உடம்பின் இடப்பாகத்தில் உள்ள பார்வதியும் அங்கு எழுந்தருள்வர். பெற்றோர் இருக்கும் இடத்திற்கு பிள்ளைகளான விநாயகர், முருகப்பெருமானும் உடனே வருவர். இவர்கள் இருவரும் இடத்தில் எல்லாம் மகாலட்சுமி கடாட்சம் வரும். மகாலட்சுமி இருக்குமிடத்திற்கு மகாவிஷ்ணு வந்து விடுவார். இப்படி ராமநாமம் ஜபிக்கும் இடத்தில் எல்லா தெய்வங்களும், தேவதைகளும் எழுந்தருள்வர். இப்படி தெய்வம் இருக்கும் இடத்தில் கஷ்டம் இருக்குமா...சொல்? உன் துன்பத்தைப் போக்க அத்தனை தெய்வங்களும் துணை நிற்பார்கள். இன்று முதல் ராமநாமம் சொல்லத் தொடங்கு. துன்பம் எல்லாம் மறைவதைக் காண்பாய்’’ அன்று முதல் ராம நாம ஜபிப்பதை அன்றாடக் கடமையாக்கிக் கொண்டார் அந்த பக்தர்.