பதிவு செய்த நாள்
21
அக்
2021
05:10
மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் மற்றும் மலைப் பகுதியில் உள்ள குப்பைகளை, கராத்தே மாணவர்கள் அகற்றினர்.
சிறுமுகை மட்சுசிமா கராத்தே பள்ளியில், ஏராளமான மாணவர்கள் கராத்தே கலைகளை கற்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு கராத்தே கலையுடன், சமூக சேவையில் ஈடுபடுவது குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கராத்தே பள்ளியின் தலைமை பயிற்சியாளர் அருள்மொழி, பயிற்றுனர் மற்றும், 52 கராத்தே மாணவர்களை அழைத்துக்கொண்டு, காரமடை அடுத்த குருந்தமலைக்கு சென்றார். அங்கு குருந்தமலை பகுதியிலும், குழந்தை வேலாயுத சுவாமி கோவில் பகுதியிலும், கிடந்த பிளாஸ்டிக் டம்ளர், மது பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், குப்பைகள் ஆகியவற்றை சுத்தம் செய்தனர். மலையைச் சுற்றி ஒரு மணிநேரத்தில், 26 மூட்டைகள் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்தனர்.
இதுகுறித்து கராத்தே பயிற்சியாளர் அருள்மொழி பேசுகையில், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை, பயன்படுத்தக்கூடாது என, உங்கள் பெற்றோர்களும் எடுத்துச்சொல்ல வேண்டும். இதனால் சுற்றுப்புற சூழல் மாசுபடுவது தடுக்கப்படும், என்றார். மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று, விழிப்புணர்வையும் மாணவர்கள் ஏற்படுத்தினர். நிகழ்ச்சி முடிவில் கராத்தே மாணவர்கள் அனைவரும், பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என, உறுதி மொழி ஏற்றனர்.