பதிவு செய்த நாள்
08
மார்
2013
11:03
வரும் 18ம் தேதி முருகனின் ஏழாவது படைவீடாக போற்றப்படும் மருதமலை கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. மருதமலை முருகன் கோவில் என்றவுடன் பக்தர்களின் சிந்தனைக்கு வருபவர் பாம்பாட்டி சித்தர்; இவரது மகிமை இன்றளவும் மருத மலையில் தொடர்கிறது. முருகனின் அருள் வேண்டி வரும் பக்தர்கள், பாம்பாட்டி சித்தரிடம் தங்களின் மனக்குறைகளை கூறிவிட்டு, அமைதியாக சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். அவ்வண்ணமே பக்தர்களின் மனக்குறைகளை பாம்பாட்டி சித்தர் தீர்த்தும் வருகிறார் என்பது பக்தர்களின் அபார நம்பிக்கை. பதினெட்டு சித்தர்களுள் ஒருவராகப்போற்றப்படும் பாம்பாட்டி சித்தர், முருகன் அருள் பெற்று மருதமலையிலேயே வாழ்ந்தவர். காடு, மலை - வனாந்திரங்களை வாசஸ்தலமாகக் கொண்டு சுற்றித்திரிந்தவர். ஒரு நாள் வனாந்திரத்தில் அலைந்து கொண்டிருந்தபோது சட்டைமுனி என்னும் சித்தர் அங்கு வந்து, அவரால் அறிவு நிலை புகட்டப்பெற்றவர். அவரே, இவருக்கு தீட்சையும் கொடுத்தார். அதன் பின், யோக நெறியில் சமாதி நிலை பெற்றார். அதன் பின், மீண்டும் சமாதியிலிருந்து எழுந்த பாம்பாட்டி சித்தர்; கூடு விட்டு கூடுபாயும் வித்தையில் கைதேர்ந்தார். இறந்து கிடந்த பாம்பை உயிர்பெற்று எழுச்செய்து ஆடவைத்துக்காட்டியதால், இவருக்கு பாம்பாட்டிச்சித்தர் என்ற பெயர் ஏற்பட்டதாக, பக்தர்கள் கூறுகின்றனர்.
இவர், ஞானப்பாடல்கள், சித்தாருடம் என்ற விஷ வைத்திய நூல்களையும் எழுதியுள்ளார். மருதமலையில் தவம் செய்த பாம்பாட்டி சித்தரிடம் முருகன் அருள் விளையாட்டுகள் பல செய்துள்ளார். மருதமலையில் பாம்பாட்டிசித்தரை வழிபடும் பக்தர்களுக்கு விஷத்தினால் வரக்கூடிய தோஷங்கள் நிவர்த்தியடைவதுடன், சரும ரோகங்களும் தீர்க்கப்படுகின்றன. அமைதி இல்லாத மனதுடன் வந்து வழிபடுவோருக்கு அமைதி கிட்டுகிறது.
வாதம், வைத்தியம், ஞானம் கைகூட வேண்டும் என்று விரும்புபவர்கள் பாம்பாட்டிச்சித்தரை தரிசனம் செய்து விட்டு சென்றால், பாம்பாட்டிச்சித்தர் பல ரூபங்களில் வந்து அத்தகையோருக்கு அருள் புரிவதாக ஐதீகம் உள்ளது. பாம்பாட்டி சித்தர் மருதமலையில் இன்றும் அருள் வடிவாகவும், முருகனின் அருளைப் பெருக்கி பக்தர்களை ஈர்க்கும் சக்தியாகவும் இருக்கிறார். இவரது சமாதி இருப்பதால் இந்த மலைக்கு பெருமையும், புகழும் அதிகரித்துள்ளது. இவரது சமாதி, மருதமலை -ஸ்தலவிருட்சத்திற்கு நேர் எதிரே உள்ளது. வாழ்க்கையில் ஞானம், மோட்சம், மனஅமைதி ஆகியவைகளை பெற விரும்பும் பக்தர்கள், பாம்பாட்டி சித்தர் கோவிலில் நின்று மனம் உருகி சித்தரிடம் சித்தத்தைக்கொடுத்தால், எண்ணியதை நிறைவேற்றித்தருவார் என்பதில் ஐயம் இல்லை.
360 டிகிரி கோணத்தில் கோயிலை வலம் வர கிளிக் செய்யவும்..