பதிவு செய்த நாள்
02
மே
2013
12:05
அட்சயதிரிதியை மே 13ல் வருகிறது. இந்த நாளில் ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என இப்போதே திட்டமிடல் நடந்து கொண்டிருக்கிறது. நகை, பிரிட்ஜ், ஏசி, டிவி, துணிமணிகள் என குழந்தை முதல் பெரியவர் வரை மினி தீபாவளியாகவே இந்த நாளைக் கருதுகின்றனர். திட்டமிடல் என்பது வாழ்க்கையில் பெரிய விஷயம். அந்த வழக்கத்தை இந்த திருவிழா நம் மத்தியில் கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக, இந்த நாளுக்காக பணத்தை சேமிக்க துவங்கி விட்டார்கள் பலர். அதாவது சுக்கிரதிசை தேடி வருகிறது. சரி...சுக்கிரதிசை என்கிறார்களே! அப்படியென்றால் என்ன!
யார் கையிலாவது நாலு காசு புழங்கினால் போதும்! அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிச்சிருக்கு என்று சொல்வது வழக்கம். ஒரு மனிதனுக்கு குடும்பத்தில் பல கடமைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற மனைவி வேண்டும். அந்த மனைவியையே தரும் உரிமை பெற்றவர் சுக்கிரன். அதனால் அவருக்கு களத்திரகாரகர்(மனைவியை தரும் உரிமை உடையவர்) என்ற பெயர் உண்டு. சுக்கிரன் சுப பலத்தோடு இருந்தால் நல்ல மனைவி வாய்க்கும் யோகத்தைத் தருவார்.
அழகான வீட்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பை அருள்பவரும் அவரே. ஒருவன் பிறந்தான்.. வாழ்ந்தான் என்றில்லாமல் அவன் பெயர்,புகழ் நிலைக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர் இசை படவாழ்தல் என்று குறிப்பிடுவார். அந்தப் புகழை ஒருவருக்கு வழங்கும் அதிகாரம் சுக்கிரனிடமே உள்ளது. சங்கீதம், நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபடச் செய்து வித்வானாக்குவார். ஆடம்பரப் பொருட்கள், மலர்கள், சந்தனம்,கஸ்தூரி, கோரோசனை, ஜவ்வாது,சென்ட் போன்ற நறுமணப் பொருள்களை உபயோகிக்க வைப்பார். ஸ்ப்ரிங் கட்டில், வெல்வெட் மெத்தை, குஷன் சேர் போன்ற சொகுசுப் பொருட்களை வாங்க காரணமாக இருப்பார். வாகனம் , கப்பல் வியாபாரம், நவரத்தின வியாபாரம், கடல்வழி, விமான பயணங்களை அனுபவிக்கச் செய்வார். நகைச்சுவை உணர்வுடன் விகட வினோதமாகப் பேச வைப்பார். சுக்கிரனுக்குரிய அதிதேவதை மகாலட்சுமி. அவளை வழிபடுவதன் மூலம், தலைமைப் பதவி கிடைக்கச் செய்வார். உறவினர், நண்பர்களுடன் நல்லுறவு கொள்ளச் செய்வார். பசு பால் பாக்கியம், லட்சுமி கடாட்சத்துடன் வாழ வைப்பார். அவரது அருளுடன் பொருட்கள் வாங்க, தினமும்,
சுக்கிர மூர்த்தி சுபமிக ஈவாய்
வக்ரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளி சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கு அருளே!
என்று நம்பிக்கையுடன் சொல்லுங்கள். அட்சய திரிதியை நன்னாளில் அள்ளிச்செல்லலாம் பொருட்களை!