மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பணப்புழக்கம் கூடும் செலவும் கூடவே வரும் (75/100)
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2016 01:04
அன்பும் அரவணைக்கும் குணமும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! (75/100)
இந்த துர்முகி ஆண்டில் ராகு 3-ம் இடத்தில் இருப்பதால் காரிய அனுகூலத்தையும், நற்சுகத்தையும், வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் கொடுப்பார். ஆனால் கேது 9-ம் இடத்தில் இருப்பதால் வருகின்ற பொருளுக்கு செலவு இழுத்து வைப்பார். சனிபகவான் தற்போது 6-ம் இடத்தில் இருக்கிறார். இங்கு அவர் நல்ல பணப்புழக்கத்தையும், காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவார். மேலும் அவரின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், காரிய அனுகூலத்தையும் தருவார். தொழில் விருத்தியையும் தந்து நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியை தருவார். ஆனால் குரு பகவான் வக்கிரம் அடைந்து 3ம் இடத்தில் உள்ளார். இதனால் முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். ஆக. 2க்கு பிறகு இவர் வக்கிர நிவர்த்தி அடைந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். அப்போது அவர் மன உளைச்சலையும், உறவினர் வகையில் பிரச்னைகளையும் தரலாம். மொத்த கிரக நிலையை கணக்கில் கொண்டு பார்த்தால், குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு தொடரும். குருவின் நிலையால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தை இழுத்தடிக்கலாம். புதிய வீடு, வாகனம் வாங்க தாமதம் ஆகலாம்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் ஆக. 2 வரை வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அரசு வகையில் கிடைக்க வேண்டிய உதவி, வங்கிகளில் விண்ணப்பித்த கடன்கள் கிடைக்க தாமதமாகலாம். உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். ஆனால் ஆக.2க்கு பிறகு தொழிலில் அபிவிருத்தி ஏற்பட்டு விடும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டியாளர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விண்ணப்பித்த கடன்கள் கிடைத்து கூடுதல் முதலீடு செய்வதற்கு வழிவகை ஏற்படும்.
பணியாளர்களுக்கு ஆக. 2 வரை கடந்த காலம் போல் அனுகூலமாக இருக்காது. சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஆக.2க்கு பிறகு பதவி உயர்வுக்கு எந்த தடையும் கிடையாது. பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சம்பள உயர்வு அபரிமிதமாக இருக்கும். அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் தடையின்றி கிடைக்கும். பணி காரணமாக வெளியூர், வெளிநாடு சென்று வருவதன் மூலம் நிறுவனத்தில் மதிப்பு கூடும்.
கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கடுமையாக உழைத்தும் பயனில்லையே என்ற நிலைமை இருக்கும்.
அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சுமாரான நிலையில் இருப்பர். அவர்கள் எதிர்பார்த்த பதவியை அடைய கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.
மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும்.
விவசாயிகள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டும். பணப்பயிர்களை பயிரிடுவதை முதல் ஆறு மாதங்கள் ஒத்தி வைக்கலாம்.
பெண்கள் ஆடம்பரத்தை தவிர்க்கவும். வீட்டுச் செலவுக்குஉரிய பணம் தடையின்றி கிடைக்கும். கேதுவின் நிலை காரணமாக உடல்நலம் காரணமாக பொருள் விரயம் வரலாம்.
2017 ஜனவரி16-ஏப்ரல்13 குரு பகவான் இப்போது 5ம் இடத்துக்கு சென்று நன்மை தருவார். கேது, ராகு பழைய இடத்திலேயே இருக்கிறார்கள். இந்த காலத்தில் பொருளாதார நிலை வளர்ச்சி அடையும். எடுத்த செயல்கள் தடையின்றி நிறைவேறும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் குடும்பத்திற்கு பெருமை கிடைக்கும். சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மன உளைச்சல், உறவினர்களால் வந்த பிரச்னை, வீண் பகை ஆகியவை மறையும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் லாபத்துக்கு குறை இருக்காது. சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலம் தரும். அரசு வகையில் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். முதலீட்டை அதிகப்படுத்தி புதிய கிளைகளை துவங்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பால் உற்பத்தி, விற்பனையைப் பெருக்கலாம்.
பணியாளர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் இருந்த பின்தங்கிய நிலை மறையும். வேலையில் பளு குறையும். விருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடலாம். உங்கள் ஆற்றல் மேம்படும். புதிய பதவி கிடைக்கும். உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன மறையும். பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறி பணம் வந்து பாக்கெட்டை நிரப்பும்.
மாணவர்கள் சிறப்பான பலனை காணலாம். விரும்பிய கல்லுõரியில் விரும்பிய பாடம் கிடைக்கும். மதிப்பெண் உயர்ந்து பெற்றோரிடம் நற்பெயர் பெறலாம்.
கலைஞர்களுக்கு அரசிடம் இருந்து பாராட்டு, விருது கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு இருந்த பின்தங்கிய நிலை மாறி வருமானமும் பதவியும் பெறலாம். சமூக நல சேவகர்கள் சிறப்படைவர்.
விவசாயிகள் புதிய சொத்து வாங்குவர். பணப்பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் மகிழ்ச்சியான பலனை காண்பர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நன்மையை தரும். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பத்ரகாளியை வழிபடுங்கள். டிசம்பர் வரை வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தியோ, கொண்டைக்கடலை மாலை அணிவித்தோ வழிபடுங்கள். சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
மேலும்
தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »