துர்முகி ஆண்டின் தொடக்தில் குரு பகவான் வக்கிரம் அடைந்து 4ம் இடமான சிம்மத்தில் உள்ளார். அவரால் மன உளைச்சலும், உறவினர் வகையில் கருத்து வேறுபாடும் வரலாம். அவர் ஆக. 2க்கு பிறகு வக்கிர நிவர்த்தி அடைந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் பல்வேறு நன்மைகளை பெறலாம். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் வளர்ச்சியை தருவார். மேலும் அவரது 5 மற்றும் 7-ம் இடத்துப்பார்வைகள் சாதகமான இடத்தில் விழுகின்றன. அதன் மூலமும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். சனி பகவான் தற்போது 7ம் இடத்தில் இருக்கிறார். பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். சேர்க்கை சகவாசத்தால் பிரச்னை வரலாம். ராகு 4ம் இடத்தில் இருப்பதால் அலைச்சல் மற்றும் சிற்சில குடும்ப பிரச்னைகளையும் உருவாக்கலாம். கேது உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருப்பதால் உடல் உபாதைகளை தரலாம்.
ஆக. 2 வரை குடும்பத்தில் பெண்களால் மேன்மை கிடைக்கும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை வேறு ஊருக்கு மாற்ற வேண்டி வரலாம். அனாவசிய செலவு ஏற்பட இடமுண்டு. இந்த சமயத்தில் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆக. 2க்கு பிறகு தடைகள் விலகி எடுத்த செயல்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் உங்களுக்கோ, குடும்பத்தில் மற்றவர்களுக்கோ நடக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். மனஉளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். பணப்புழக்கம் உயர்வதால் கடன்கள் அடைபடும். கணவன்-மனைவி இடையே பாசம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். வேலை இல்லாமல் தவித்தவர்கள் அந்த பிரச்னைக்கு முடிவு காண்பர். சொந்தத் தொழில் துவங்கி சம்பாதிக்க இடம் உண்டு. மொத்தத்தில் ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை ரிஷப ராசியினர் சுப பலன்களை அனுபவிப்பர்.
தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டி வரும். ஆனால் அதற்கேற்ப வருமானமும் உயரும். எந்த தொழிலிலும் அதிக பண முதலீடு செய்ய வேண்டாம். போட்டியாளர்களின் இடையூறு வரத்தான் செய்யும். அரசு வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம். சிலருக்கு பொருள் விரயம் ஆகலாம். ஆக.2க்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். குரு பகவானின் 7-ம் இடத்துப் பார்வையால் தொழிலில் உயர்வும், வியாபாரத்தில் நல்ல லாபமும் காணலாம். பணப்புழக்கம் மேம்படும்.
பணியாளர்கள் ஆண்டு துவக்கத்தில் அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியது வரலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். ஆக.2க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். சலுகைகளை விரைந்து பெற இடமுண்டு.
மாணவர்களுக்கு சற்று தொய்வு ஏற்படலாம். மாணவர்களுக்கு சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். ஆவால் இவர்கள் அனைவருமே ஆகஸ்ட் முதல் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகள்அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும்.
பெண்கள் நகை மற்றும் ஆடை சேர்க்கையால் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.
2017 ஜனவரி16-ஏப்ரல்13 குரு பகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. பொதுவாக 6ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். ஆனாலும் கவலை வேண்டாம். அவரது 9ம் இடத்து பார்வையால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்க லாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூடாது. அதே நேரம் குருவின் பார்வை பக்கபலமாக இருப்பதால், கடும் முயற்சி செய்தால் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் அமையும்.
தொழில், வியாபாரத்தில் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். எதையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய நினைப்பவர்கள் மிக அதிகமான முதலீட்டைக் கொட்ட வேண்டாம்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சலும் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சலுகைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படும். பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்தால் பல பிரச்னைகளில் இருந்து தப்பி விடலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம்.
மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல மதிப்பெண் பெற முடியும். விவசாயத்தில் அதிக முதலீடு பிடிக்கும் சாகுபடி எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்களை சமாதானமாக பேசி தீர்ப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
பரிகாரம்: விநாயகரையும், விஷ்ணுவையும் தொடர்ந்து வழிபடுங்கள். நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். டிசம்பர் மாதத்திற்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 21 தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
மேலும்
தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »