மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) சாதனை படைக்கலாம் சந்தோஷமாய் வாழலாம்!(65/100)
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2016 01:04
மணக்கப் பேசி மற்றவர் மனதை இனிக்க வைக்கும் மகர ராசி அன்பர்களே! (65/100)
சனி பகவான் தற்போது 11ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளைத் தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். ஆனால் குரு, ராகு, கேது ஆகிய கிரகங்கள் பாதக நிலையில் உள்ளனர். குரு பகவான் 8ம் இடத்தில் உள்ளார். அவரால் மன வேதனை, நிலையற்ற தன்மை, பொருளாதார சரிவு, வீண் விரோதம் முதலியன ஏற்படலாம். இவை அனைத்தும் ஆக.2க்கு பிறகு மறையும். ஆக.2ல் அவர் கன்னி ராசிக்கு மாறியதும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். தீட்டியுள்ள திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து ஒத்துப்போகும் நிலை வரும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இது தவிர குருவின் 9ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை தடையின்றி நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களுக்கு ஆண்களாலும், ஆண்களுக்கு பெண்களாலும் மேன்மை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். ராகு 8-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்னைகளை உருவாக்கலாம். கேது 2-ம் இடத்தில் இருப்பதும் சிறப்பான இடம் அல்ல. அவரால் அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. வீட்டில் பொருட்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். மொத்தத்தில் சனி மற்றும் குருவின் நிலையால் தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். ஆக.2க்கு பிறகு எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். தடைகள் அனைத்தும் அகலும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களை புகழ்வர். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் ஆக. 2 வரை ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். போட்டியாளர்கள் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆகஸ்ட் 2க்கு பிறகு நல்ல முன்னேற்றம் காணலாம். வருமானம் அதிகரிக்கும். அரசின் உதவி கிடைக்கும். புதிய தொழில் மற்றும் கிளைகள் துவங்கும் திட்டம் நிறைவேறும். சேமிக்கும் அளவுக்கு லாபம் இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் தொழில், வியாபாரத்தில் பெரும் சாதனை படைப்பீர்கள்.
பணியாளர்கள் ஆக. 2 வரை வேலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அதுவரை நீங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்காது. ஆக. 2க்கு பிறகு வேலையில் இருக்கும் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடலாம். வேலைப்பளு குறையும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு இடம் உண்டு.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று முன்னேற்றம் காணலாம். பொது தொண்டில் இருப்பவர்கள் மதிப்பு, மரியாதை கிடைக்கப்பெறுவர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள் ஆக. 2க்கு பிறகு சிறப்பான பலனை பெறலாம். படிப்பு நீங்கலான பிற துறைகளிலும் பரிசு கிடைக்க இடம் உண்டு.
விவசாயிகள் சிறப்பான வருவாயை காணலாம். நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம். வழக்கு விவகாரங்களின் தீர்ப்பு சாதகமாக இருக்கும்.
பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். புத்தாடை, நகை கிடைக்கும்.பிள்ளைகள் உடல் நலனில் சற்று அக்கறை காட்டவும். திருமணமாகாத பெண்களுக்கு ஆக.2க்கு பிறகு நல்ல இடத்தில் வரன் அமையும்.
2017 ஜனவரி16-ஏப்ரல் 13 இதுவரை சாதகமாக இருந்த குரு அதிசாரமாகி மார்ச் 10 வரை துலாமிற்கு செல்கிறார். பொதுவாக இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனாவசிய செலவை தவிர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். எனவே வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். ஆனால், பணவரவுக்கு இடைஞ்சல் இராது. குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சில பூசல்கள் வரலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். ஆனால் அதுவும் நன்மைக்கே.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு போதிய அளவு லாபம் தொடரும். ஆனால் மிக அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய தொழில், வியாபாரத்தை தற்போது தொடங்க வேண்டாம். போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது வந்தாலும் பாதிப்பு இருக்காது.
பணியாளர்கள் கடந்த காலம் போல உன்னதமான பலனை எதிர்பார்க்க முடியாது. வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். சமூக நல சேவகர்கள் நற்புகழை பெறுவர்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது.
மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டி இருக்கும்.
விவசாயிகளுக்கு நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர் நல்ல மகசூலை தரும். புதிய சொத்து வாங்க கடும் போட்டி நிலவும். பக்கத்து நிலத்துக்காரரிடம் அனுசரித்து போவது நல்லது.
பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.
பரிகாரம்: நரசிம்மர், துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் பைரவரை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஆக. 2 வரை வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். ஞானிகளை சந்தித்து ஆசி பெறுங்கள்.
மேலும்
தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »