பதிவு செய்த நாள்
18
அக்
2016
10:10
தஞ்சாவூர்: உலக புகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரிய கோவில், அதிகாரிகளின் முறையற்ற பராமரிப்பால், பொலிவிழந்து காணப்படுகிறது.தஞ்சை பெரிய கோவில், உலக பிரசித்தி பெற்றது. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவில் மற்றும் கலைநயம் மிக்க சிற்பங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. இத்தகைய அழகு மிக்க கோவிலை, யுனெஸ்கோ புகழ்ந்துள்ளது. கோவில், மத்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ், பராமரிக்கப்படுகிறது. இதை காண, தமிழகம் மட்டுமல்லாது, வெளியூரில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோவிலுக்கு செல்லும் வழியில், முதலில் ராஜராஜன் நுழைவாயிலும், அடுத்து கேரளாந்தகன் நுழைவாயிலும், அடுத்து விமான கோபுரமும் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள பழமையான கலை நயமிக்க சிற்பங்கள், கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள், வாயில்கள் என, அனைத்து இடங்களும் பாசி படிந்த நிலையில் உள்ளன. கோவில் ராஜகோபுரம் முகப்பில் இருபுறமும் பூசப்பட்டுள்ள வர்ணம் பெயர்ந்து வருகிறது. விரைவில், வட கிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என, பலரும் தெரிவிக்கின்றனர். தொல்லியல் துறை, அனைத்து இடங்களிலும் படிந்துள்ள கறைகளை சுத்தப்படுத்தி, அடுத்த மாதம் வரவிருக்கும் சதய விழாவிற்குள், கோவிலை பொலிவு படுத்த வேண்டும் என, சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.