திருவாடானை: திருவாடானை பகுதியில் உள்ள பழமையான கோயில்கள் பராமரிப்பு இன்றி பாழடைந்து வருவது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. திருவாடானை, தொண்டி பகுதிகளில் பழமைவாய்ந்த சிவன், பெருமாள், புத்தர் கோயில்கள் உள்ளன. இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் கோயில்களை கட்டி வழிபட்டு வந்தனர். தற்போது இந்த கோயில்கள் பராமரிப்பின்றி பாழடைந்துவருகிறது. தொண்டி அருகே உள்ள தளிர்மருங்கூர் கிராமத்தில் உள்ளது உலகேஸ்வரர் கோயில். இங்கு நந்தி மற்றும் இரட்டை பிள்ளையாருடன் உலகேஸ்வரி தாயார் அருள்பாலிக்கிறார். மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துவிட்டது. கோயில் இருந்த இடம் புதர்மண்டி உள்ளது. இருந்தும் அப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது குறித்து தளிர்மருங்கூர் கிராமத்தை சேர்ந்த ராசு கூறுகையில்,“ தளிர்மருங்கூர் உலகேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பல ஏக்கர் உள்ளது. அனைத்தும் தனியார் வசம் உள்ளது. கோயிலை புதுப்பிக்க பல லட்சம் செலவிடவேண்டி உள்ளதாக கிராம மக்கள் தயங்குகின்றனர். திருவெற்றியூரை சேர்ந்த சிவாச்சாரியார் தினமும் இக்கோயிலுக்கு வந்து பூஜை செய்கிறார். கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு அதன்மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து கோயிலை பராமரிக்கலாம். பிரிசித்தி பெற்ற இக்கோயில் பராமரிப்பு இல்லாமல் இருப்பது கவலையாக உள்ளது. அரசு நிதி உதவியுடன் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையதுறையினர் முன்வரவேண்டும்,” என்றார். இக்கோயிலை போன்று எஸ்.பி.பட்டினம் சிவன் கோயில், ஆலம்பாடி பெருமாள் கோயில், அரும்பூர் புத்தர் கோயில்கள் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. இக்கோயில்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் அரிய பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.