பதிவு செய்த நாள்
25
அக்
2016
12:10
திருநீர்மலை: நமது நாளிதழின் செய்தி எதிரொலியாக, திருநீர்மலை ரங்கநாதர் கோவில் குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. திருநீர்மலையில், ரங்கநாத பெருமாள் கோவில் தெப்ப குளத்தின் பராமரிப்பு மோசமாக உள்ளது. இரவில், குளத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி, குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், எங்கு பார்த்தாலும் மது பாட்டில், பிளாஸ்டிக் டம்பளர்களாக உள்ளன. குளத்தின் உட்பகுதியில், பிளாஸ்டிக், குப்பை தேங்கியுள்ளதோடு, புற்கள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. இது குறித்து, நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 15 ஊழியர்களை கொண்டு, குப்பை, பிளாஸ்டிக் மற்றும் புற்கள் அகற்றப்படுகின்றன. குளத்தின் சுற்றுப்புறத்தில் இரவில் மது அருந்துவதை தடுக்க, ரோந்து பணியை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தின் சார்பில், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், உடைந்த இடங்களில் புதியதாக சுற்றுச்சுவர் கட்ட, திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணியும் நடந்து வருவதாக, கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.