Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனாவில் கோகலேயுடன் சாந்திநிகேதனம் சாந்திநிகேதனம்
முதல் பக்கம் » ஐந்தாம் பாகம்
அது ஒரு பயமுறுத்தலா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 அக்
2011
12:10

புனாவிலிருந்து ராஜ்கோர்ட்டுக்கும் போர்பந்தருக்கும் போனேன். காலஞ்சென்ற என் சகோதரரின் மனைவியையும் மற்ற உறவினர்களையும் பார்ப்பதற்கே அங்கே சென்றேன். தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகத்தின் போது ஒப்பந்தத் தொழிலாளரின் உடைக்குப் பொருத்தமானதாகவே என் உடையும் இருக்கவேண்டும் என்பதற்காக என் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். இங்கிலாந்தில்கூட வீட்டுக்குள் இருக்கும்போது அதே உடையில்தான் இருந்து வந்தேன். பம்பாயில் வந்து இறங்கியபோது உள் சட்டை, மேல் சட்டை, வேட்டி, அங்க வஸ்திரம் ஆகியவைகளைக் கத்திய வாரி முறைப்படி அணிந்து கொண்டேன். இத்துணிகளெல்லாம் இந்திய மில்களில் தயாரானவை. ஆனால், பம்பாயிலிருந்து ரெயிலில் மூன்றாம் வகுப்பில் நான் பிரயாணம் செய்ய வேண்டியிருந்ததால் அங்க வஸ்திரமும் மேல்சட்டையும் அனாவசியமான இடையூறுகள் என்று கருதி அவற்றைப் போட்டுவிட்டேன். எட்டு அணா, பத்தணா விலையில் ஒரு காஷ்மீர்த் தொப்பி வாங்கிக் கொண்டேன். இத்தகைய உடை அணிந்திருப்பவரை ஏழை என்றே கருதுவார்கள்.

அச்சமயம் பிளேக் நோய் பரவி இருந்ததால் வீரம் காமிலோ அல்லது வத்வானிலோ - எந்த ஊர் என்பதை மறந்துவிட்டேன்- மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளை வைத்தியப் பரிசோதனை செய்து வந்தனர். எனக்குச் சுரம்கொஞ்சம் இருந்தது. எனக்குச் சுரம் இருக்கிறது என்பதை இன்ஸ்பெக்டர் கண்டதும் ராஜ்கோட் வைத்திய அதிகாரியிடம் போய் ஆஜராகும்படி என்னிடம் கூறி என் பெயரையும் பதிவு செய்துகொண்டார். நான் வத்வான் வழியாகப் போய்க்கொண்டிருக்கிறேன் என்று யாரோ சொல்லியிருக்கவேண்டும். ஏனெனில், அவ்வூரில் பிரபல பொதுஜன ஊழியரும், தையற்காரருமான மோதிலால் ஸ்டேஷனுக்கு வந்து என்னைப் பார்த்தார். வீரம்காம் சுங்க வரியைப்பற்றி அவர் என்னிடம் சொன்னார். அதனால், ரெயில்வேப் பிரயாணிகள் அனுபவிக்க வேண்டியிருக்கும் துயரங்களையும் கூறினார். எனக்குச் சுரம் இருந்ததால், பேசுவதற்கே எனக்கு விருப்பமில்லை. சுருக்கமாகப் பதில் சொல்லிவிட முயன்றேன். என்னுடைய பதில் ஒரு கேள்வியாக அமைந்தது. சிறை செல்ல நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்பதே என்னுடைய கேள்வி.

தாங்கள் பேசுவது இன்னதென்பதைச் சிந்திக்காமலேயே சிலர் பேசிவிடுவார்கள். அப்படிப்பட்ட ஆவேச உணர்ச்சியுள்ள வாலிபர்களில் மோதிலாலும் ஒருவர் என்று நான் எண்ணினேன். ஆனால், அவர் அப்படிப்பட்டவர் அன்று. உறுதியுடன் தீர்மானமாக அவர் பின்வருமாறு பதில் கூறினார்: நீங்கள் எங்களுக்குத் தலைமை வகித்து இயக்கம் நடத்துவதாயின் நாங்கள் நிச்சயமாகச் சிறை செல்வோம். கத்தியவாரைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் எங்களுக்கு உங்கள் மீது முதல் உரிமை உண்டு. என்றாலும், இப்பொழுது உங்களை இங்கே தாமதிக்கச் செய்யும் உத்தேசம் எங்களுக்கு இல்லை. ஆனால், திரும்பும்போது இங்கே தங்கிச் செல்லுவதாக வாக்குறுதியளிக்க வேண்டும். நமது வாலிபர்கள் செய்து வரும் வேலையையும் அவர்களுக்குள்ள உணர்ச்சியையும் பார்த்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். எங்களுக்குக் கட்டளையிட்ட மாத்திரத்தில் நாங்கள் முன்வருவோம் என்பதை நீங்கள் நம்பலாம்.

மோதிலால் என்னைக் கவர்ந்துவிட்டார். அவரைப் பற்றி அவருடைய தோழர் ஒருவர் பின்வருமாறு பாராட்டிக் கூறினார்: இந்த நண்பர் சாதாரணத் தையற்காரரே. தமது தொழிலில் மிகவும் திறமைசாலி. ஆகையால், தமக்குத் தேவையான ரூபாய் பதினைந்தை, தினத்திற்கு ஒரு மணி நேரம் வேலை செய்து, ஒரு மாதத்தில் சம்பாதித்துக்கொண்டு விடுகிறார். மீதமுள்ள தமது நேரத்தையெல்லாம் பொதுச் சேவைக்குச் செலவிடுகிறார். எங்களுக்கெல்லாம் அவர்தான் தலைவர். படித்தவர்களாகிய நாங்கள் அவரைக் கண்டு வெட்கமடைகிறோம். பின்னால் மோதிலாலுடன் நான் நெருங்கிப் பழக நேர்ந்ததும், இந்தப் பாராட்டுரையில் மிகைப்படுத்திக் கூறப்பட்டது எதுவும் இல்லை என்பதைக் கண்டேன். ஆசிரமத்தை ஆரம்பித்த காலத்தில், ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் அவர் அங்கே தங்குவார். ஆசிரமக் குழந்தைகளுக்கு அவர் தையல் வேலை சொல்லிக் கொடுத்ததோடு ஆசிரமத்திற்கு வேண்டிய துணிமணிகளையும் தைத்துக் கொடுப்பார். ஒவ்வொரு நாளும் வீரம்காமைப் பற்றி என்னிடம் பேசுவார். பிரயாணிகளின் துயரங்களையும் சொல்லுவார். அக் கஷ்டங்கள் அவருக்கு முற்றும் சகிக்க முடியாதவையாகி விட்டன. திடீரென்று நோயுற்று, அவர் நல்ல இளம் வயதில் காலமானார். வத்வானின் பொதுவாழ்வுக்கு அவருடைய பிரிவினால் அதிக நஷ்டம் ஏற்பட்டது.

ராஜ்கோட் போய்ச் சேர்ந்ததும் மறுநாள் காலை வைத்திய அதிகாரியிடம் போனேன். அங்கே எல்லோருக்கும் என்னைத் தெரிந்திருந்தது. நான் தம்மிடம் வர நேர்ந்ததைக் குறித்து டாக்டர் வெட்கப்பட்டதோடு இன்ஸ்பெக்டர்மீதும் கோபமடைந்தார். இன்ஸ்பெக்டர் தமது கடமையையே செய்தாராகையால் இக்கோபம் அனாவசியமானது. அவருக்கு என்னைத் தெரியாது; என்னைத் தெரிந்திருந்தாலும் அவர் வேறு விதமாக நடந்து கொண்டிருக்க முடியாது. இனித் தம்மிடம் வர வேண்டியதில்லை என்று வைத்திய அதிகாரி கூறி விட்டார். அதற்குப் பதிலாக என்னிடம் ஓர் இன்ஸ்பெக்டரை அனுப்பினார். அத்தகைய சந்தர்ப்பங்களில் சுகாதாரக் காரணங்களுக்காக மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளைப் பரிசோதிப்பது அவசியமேயாகும். பெரிய மனிதர்கள், மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்ய முற்படுவார்களாயின், வாழ்க்கையில் அவர்களுடைய நிலை எதுவாக இருப்பினும், ஏழைகள் என்ன என்ன கட்டுத்திட்டங்களுக்கு உட்பட வேண்டியிருக்கின்றதோ அவைகளுக்கெல்லாம் அவர்களும் விரும்பிக் கட்டுப்பட வேண்டும். திகாரிகளும் பாரபட்சம் காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும். அதிகாரிகளோ, மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளும் தம்மைப் போல மனிதர்களே என்று கருதாமல் செம்மறி ஆடுகளாகப் பாவிக்கிறார்கள் என்பதே என் அனுபவம்.

அப்பிரயாணிகளிடம் அவமதிக்கும் தோரணையிலேயே பேசுகிறார்கள். அவர்கள் ஏதாவது பதில் சொல்லிவிட்டாலோ, விவாதித்து விட்டாலோ, அதிகாரிகள் சகிப்பதில்லை. மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள், அதிகாரிகளின் வேலைக்காரர்களைப்போல அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளை அதிகாரிகள் அடிக்கலாம்;பயமுறுத்திப் பணம் பறிக்கலாம்; சாத்தியமான எல்லாவித அசௌகரியங்களையும் பிரயாணிகள் அனுபவிக்கும்படி செய்துவிட்ட பிறகே அவர்களுக்கு டிக்கெட்டும் கொடுக்கலாம். இவ்விதம் டிக்கெட்டு வாங்குவதற்குள் ரெயிலும் போய்விடும். என்றாலும் இதற்கெல்லாம் கேள்வி முறையே இல்லை. இவற்றையெல்லாம் நான் என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன். படித்தவர்களும் பணக்காரர்களுமான சிலர், ஏழைகளின் அந்தஸ்தை விரும்பி ஏற்றுக் கொண்டு மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தாலன்றி, ஏழைகளுக்கு மறுக்கப்படும் வசதிகளை அனுபவிக்க இவர்கள் மறுத்துவிட்டாலல்லாமல், தவிர்க்கக்கூடிய கஷ்டங்களையும், அவமதிப்புக்களையும், அநீதிகளையும் அனுபவிக்க வேண்டியதே என்று சும்மா இருந்து விடாமல் அவைகளை ஒழிப்பதற்காகப் போராடினாலன்றி, இந்நிலைமையில் சீர்திருத்தமே சாத்தியமில்லை.

கத்தியவாரில் நான் சென்ற இடங்களிலெல்லாம் வீரம்காம் சுங்கத் தொல்லைகளைப் பற்றிய புகார்களையே கூறினர். ஆகையால், லார்டு வில்லிங்டன் அளித்திருந்த வாக்குறுதியை உடனே பயன்படுத்திக்கொள்ளுவது என்று முடிவு செய்தேன். இது சம்பந்தமாகக் கிடைத்த பிரசுரங்கள் யாவற்றையும் சேகரித்துப் படித்தேன். புகார்களெல்லாம் உண்மையானவை என்று நான் திருப்தியடைந்த பிறகு பம்பாய் அரசாங்கத்திற்குக் கடிதம் எழுத ஆரம்பித்தேன். லார்டு வில்லிங்டனின் அந்தரங்கக் காரியதரிசியைக் கண்டு பேசினேன். கவர்னரையும் சந்தித்தேன். கவர்னர் தமது அனுதாபத்தைத் தெரிவித்தார். ஆனால், தவறுக்கு டில்லி அரசாங்கத்தின்மீது பழி போட்டார். இது எங்கள் கையில் இருந்தால் சுங்கத்தை எடுத்திருப்போம். இந்திய அரசாங்கத்தினிடமே நீங்கள் போக வேண்டும் என்றார், கவர்னர். இந்திய அரசாங்கத்திற்கு எழுதினேன். ஆனால், என் கடிதம் கிடைத்தது என்பதற்கு ஓர் அத்தாட்சி வந்ததேயன்றி வேறு பதிலே இல்லை. பின்னால் லார்டு செம்ஸ்போர்டைச் சந்திக்கும் சமயம் வந்த பிறகே பரிகாரத்தை அடைய முடிந்தது. இதைப் பற்றிய விவரம் முழுவதையும் அவருக்கு நான் எடுத்துக்கூறிய போது அவர் ஆச்சரியப்பட்டுவிட்டார். இதைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தது. நான் கூறியவைகளையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார். வீரம்காம் பற்றிய தஸ்தாவேஜூகளை எல்லாம் அனுப்பும்படி அப்பொழுதே டெலிபோனில் உத்தரவிட்டார்.

அதிகாரிகள் தக்க சமாதானம் கூறாவிட்டால், அல்லது இருப்பதே சரி என்று காட்டாவிடில், சுங்கத்தை நீக்கி விடுவதாகவும் வாக்களித்தார். நான் வைசிராயைக் கண்டு பேசிய சில தினங்களுக்கெல்லாம் வீரம்காம் சுங்கம் நீக்கப்பட்டு விட்டதெனப் பத்திரிகைகளில் படித்தேன். இந்தியாவில் சத்தியாக்கிரகத்திற்கு இச்சம்பவம் ஆரம்பம் என்று நான் கருதினேன். ஏனெனில், கத்தியவாரில் பகஸ்ரா என்ற இடத்தில் நான் செய்த பிரசங்கத்தில் சத்தியாக்கிரகத்தைப் பற்றிக் கூறியிருந்தேன். பம்பாய் அரசாங்கத்தின் காரியதரிசியை நான் சந்தித்துப் பேசியபோது, நான் சத்தியாக்கிரகத்தைப் பற்றி அப்பிரசங்கத்தில் கூறியதை ஆட்சேபித்தார். அது பயமுறுத்தல் அல்லவா? என்று அவர் கேட்டார். பலம் பொருந்திய அரசாங்கம் பயமுறுத்தல்களுக்கு விட்டுக் கொடுத்துவிடும் என்று நினைக்கிறீர்களா? என்றார். அதற்கு நான் கூறிய பதிலாவது: இது பயமுறுத்தலே அல்ல. மக்களுக்குப் போதிப்பதே இது. குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்குள்ள எல்லா நியாயமான உபாயங்களையும் மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியது என் கடமை. சுதந்திரத்தை அடைய விரும்பும் ஒரு நாட்டு மக்கள், அந்த சுதந்திரத்திற்கான எல்லா வழிகளையும் முறைகளையும் அறிந்திருக்க வேண்டும். அவ்வழிகளில் சாதாரணமாகக் கடைசியான வழியாக இருந்து வருவது பலாத்காரம். ஆனால், அதற்கு நேர் மாறாகச் சத்தியாக்கிரகமோ, முற்றும் அகிம்சையோடு கூடிய ஆயுதம். அதன் உபயோகத்தைக் குறித்தும் அதில் உள்ள குறைபாடுகளைப் பற்றியும் விளக்கிக் கூற வேண்டியது என் கடமை என்று கருதுகிறேன். பிரிட்டீஷ் அரசாங்கம் பலமுள்ள அரசாங்கம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், சத்தியாக்கிரகமே மிகச் சிறந்த பரிகாரம் என்பதிலும் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. கெட்டிக்காரரான அந்தக் காரியதரிசி, நான் கூறியதை ஒப்புக் கொள்ளத் தயங்கும் முறையில் தலையை அசைத்து, பார்ப்போம் என்றார்.

 
மேலும் ஐந்தாம் பாகம் »
temple news

முதல் அனுபவம் அக்டோபர் 10,2011

நான் தாய்நாட்டிற்கு வந்து சேருவதற்கு முன்னாலேயே போனிக்ஸிலிருந்து புறப்பட்டவர்கள் இந்தியா சேர்ந்து ... மேலும்
 
temple news
கவர்னர் என்னைப்பார்க்க விரும்புகிறார் என்று நான் பம்பாய் வந்து சேர்ந்ததுமே கோகலே எனக்குத் தகவல் ... மேலும்
 
temple news

சாந்திநிகேதனம் அக்டோபர் 10,2011

ராஜ்கோட்டிலிருந்து சாந்திநிகேதனத்திற்குச் சென்றேன். அங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் என்னை அன்பில் ... மேலும்
 
temple news
மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள், டிக்கெட்டுகளை வாங்குவதற்கும்கூட என்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்க ... மேலும்
 
temple news
நாங்கள் புனா வந்து சேர்ந்தோம். சிரார்த்தச் சடங்குகளெல்லாம் முடிந்த பிறகு இந்திய ஊழியர் சங்கத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar