கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) போட்டியில் வெற்றி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2017 03:01
அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
சுக்கிரன் ஜன.27ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மைகளை வாரி வழங்குவார். புதன் ஜன.30 வரை நன்மை அளிப்பார். குரு ஜன.16ல் 9ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இது வரை அவரால் பட்ட துன்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் கையில் அதிகரிக்கும். தேவையனைத்தும் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் வசந்த காற்று வீசத் தொடங்கும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உருவாகும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குருவின் 9ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன்கள் அதிகரிக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுக்கிரனால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஜன.27க்கு பிறகு பொருளாதார வளம் பெருகும். சமுதாயத்தில் மதிப்பு உயரும். புதன் ஜன.30ல் இடம் மாறுவதால் அண்டை வீட்டார் வகையில் பிரச்னை குறுக்கிடலாம். ஜன.25,26ல் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். பிப்.3,4ல் புத்தாடை அணிகலன் வாங்க வாய்ப்புண்டாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். ஜன.20.21, பிப்.7,8ல் மனதில் குழப்பம் உருவாகி மறையும்.
தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். லாபம் சிறப்பாக இருக்கும். ஜன.27க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் மூலம் விரிவாக்கப் பணியில் ஈடுபட வாய்ப்புண்டு. புதன் ஜன.30ல் இடம் மாறுவதால் மறைமுகப் போட்டி மறையும். பிப்.9,10ல் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். செவ்வாயால் ஜன.16க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ராகுவால் வெளியூர் பயணம், அலைச்சல் அதிகரிக்கும்.
பணியாளர்கள் குருவின் பலத்தால் உயர்வு பெறுவர். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க யோகமுண்டாகும். ஜன.27க்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறும். எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். ஜன. 22,23,24ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். செவ்வாயால் ஜன.16க்கு பிறகு நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு ஜன.27க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் விடாமுயற்சியால் கிடைக்க பெறலாம்.
அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. தொண்டர்களுக்காகப் பணம் செலவழிக்க நேரிடும். அரசியல்ரீதியான பயணம் செல்லும் நிர்ப்பந்தம் உருவாகும்.
மாணவர்கள் போட்டி பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். ஜன.30க்கு பிறகு புதன் சாதகமற்று காணப்படுவதால் விழிப்புடன் படிக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் ஆசிரியர்கள் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும்.
விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானத்தை பெறலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் தேவை பூர்த்தியாகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறாமல் போகலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் கணவரின் அன்பை பெற்று மகிழ்வர். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். ஜன.30,31ல் வாழ்வில் இனிய அனுபவம் காண்பீர்கள். விருந்து, விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். ஜன.15,16, பிப்.11,12ல் சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
நல்ல நாள்: ஜன.14,15,16,22,23,24,25,26, 30,31, பிப்.3,4,9,10,11,12
கவன நாள்: ஜன. 17,18,19 சந்திராஷ்டமம். இந்த காலத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: தினமும் காலையில் சூரியனை வழிபடவும். சனிக்கிழமை பெருமாளை வணங்கி வாருங்கள். பவுர்ணமியன்று அம்மனுக்கு தீபமேற்றுங்கள். ஆதரவற்றோருக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வீரபத்திரர் வழிபாடு நன்மையளிக்கும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »