*அன்பு மனம் கொண்ட நல்லவர்களின் வாழ்வு, உலகமே போற்றும் விதத்தில் சிறப்பாக அமையும். *பேச்சில் உண்மையும், செயலில் நேர்மையும் நிரம்பியதாக வாழ்க்கை இருக்க வேண்டும். சினம் என்னும் நெருப்பிற்கு இடம் தரக் கூடாது. *மலர்களின் மணம், பறவைகளின் இனிய குரல், சூரிய உதயம் என அனைத்தையும் கண்டு மகிழுங்கள். இயற்கையின் இனிமையை அனுபவிக்க பழகுங்கள். *மலர்களின் வாசனை காற்று அடிக்கும் திசையில் பரவும். ஆனால், நல்லவர் புகழோ காற்றையும் கடந்து நாலாபக்கங்களிலும் பரவி விடும். *புண்ணியமான செயல்களில் விரைந்து ஈடுபடுங்கள். பாவச் செயல்களில் இருந்து மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். *பிறருக்கு உபதேசிக்கும் முன் மனிதன், தன்னைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். சுயகட்டுப்பாடே ஒழுக்கத்தின் அடிப்படை. *பணம், பட்டம், பதவி என எத்தனை சிறப்பை மனிதன் பெற்றிருந்தாலும் சிந்திக்கும் அறிவு இல்லாவிட்டால் பயன் இல்லாமல் போகும். *அறிவாளியின் நட்பு, உறவினரைப் போல இன்பம் அளிக்கும். மூடர் நட்பு, பகைவனைப் போல துன்பம் கொடுக்கும். *இரு தரப்பு வாதங்களையும் பொறுமையுடன் கேட்ட பின்னரே, நடுவுநிலையுடன் தீர்ப்பு அளிக்க வேண்டும். *தனக்குத் தானே தலைவனாக மனிதன் திகழ வேண்டும். தன்னைத் தானே அடக்கப் பழகியவன் தலைமைப் பதவிக்கு தகுதி பெறுவான். *உண்மையை யாராலும் மறைக்க முடியாது. மேகத்தில் இருந்து விடுபட்ட நிலா போல உண்மை உலகெங்கும் பிரகாசிக்கும். *பொற்காசு மழை போல பொழிந்தாலும் பேராசை மிக்கவனுக்கு மனம் அடங்காது. வேட்டைக்காரனிடம் சிக்கிய முயல் போல அவன் அலைய நேரிடும். *அறிவுள்ள எதிரியை விட முட்டாள் நண்பனின் நட்பு தீமை தரும். *மூடப்பழக்கத்தை விட்டொழியுங்கள். ஒழுக்கத்தை உயிராக போற்றுங்கள். *அவசியமான நேரத்தில் பேசுங்கள். மற்ற நேரத்தில் அமைதியைக் கடைபிடியுங்கள். *விழிப்போடு இருந்தால் வாழ்வு சுகமாக இருக்கும். துன்பம் நேரும் போது, மனம் விட்டு அழுதால் மன அழுக்குகள் கரைந்து போகும். *உண்மை என்பதற்காக பிறர் மனம் புண்பட பேசக் கூடாது. நமக்கு மட்டுமின்றி மற்றவரும் நன்மை அடையும் விதத்தில் பேச வேண்டும். *பகையை பகையால் வெல்ல முடியாது. அன்பு ஒன்றே அதற்குரிய ஒரே தீர்வு. *எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அதன் தரத்தில் அக்கறை கொள்ளுங்கள். அதுவே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். *நமக்கு மட்டுமின்றி நம்மைச் சார்ந்த சமுதாயம், உலகத்திற்கும் பயன் அளிப்பதாக மனிதனின் வாழ்க்கை அமைய வேண்டும். - வாழ்த்துகிறார் புத்தர் -