பதிவு செய்த நாள்
16
ஆக
2017
12:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழாவில், ஒன்றரை லட்சம் பக்தர்கள், முருகப் பெருமானை தரிசித்தனர்.
காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்த பக்தர்கள், ஐந்து மணி நேரம் பொது வழியில்
காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை
விழா, கடந்த, 13ம் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கியது.
நேற்று முன்தினம், ஆடிப் பரணியும், நேற்று, ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் நாள்
தெப்பத் திருவிழா நடந்தது.ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:00
மணிக்கு மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து தங்க கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில், காவடி மண்டபத்தில் உள்ள உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மதியம், 12:30 மணிக்கு, திருப்பதி - திருமலையில் இருந்து, கோவில் செயல் அலுவலர், அணில் குமார்சிங்கால், துணை நிர்வாக அதிகாரி
சீனிவாசராஜு, மற்றும் கோவில் தலைமை குருக்கள் ஆகியோர் ஆடிக்கிருத்திகையை
முன்னிட்டு, 12வது முறையாக, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வந்தனர். அப்போது, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.தொடர்ந்து
மூலவரை தரிசித்த பின், பட்டு வஸ்திரத்தை சண்முகப் பெருமானுக்கு அணிவித்து,
சிறப்பு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து, முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், திருப்பதி
கோவில் அதிகாரிகளுக்கு பிரசாதங்கள் கொடுத்தனர்.
* ஒரு லட்சம் காவடிகள்:
ஆடிக்கிருத்திகை, விழாவில் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு
லட்சம் பக்தர்கள் மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி மற்றும் அன்னக் காவடிகள்
எடுத்தும், பம்பை, சிலம்பாட்டத்துடன் பக்தி பாடல்களை பாடிவாறு மலைக்கோவிலுக்கு
சென்று மூலவரை வழிபட்டனர். மொத்தத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று
இரவு வரை ஒன்றரை லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.
மலைக்கோவிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். விரைவு தரிசனம் செய்வதற்காக, கோவில் நிர்வாகம், 150 மற்றும் 50 ரூபாய் டிக்கெட்டுகள் மலைக்கோவிலில் விற்பனை செய்தது. ஆடிக்கிருத்திகையையொட்டி, திருத்தணி நகர் முழுவதும், பல்வேறு தொண்டு நிறுவனத்தின் சார்பில், அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கினர்.
* முதல் நாள் தெப்பம்:
ஆடிக்கிருத்திகையையொட்டி, நேற்று இரவு முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. மாலை, 6:30 மணிக்கு உற்சவர் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக சரவணபொய்கைக்கு வருகை தந்தார். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில்
எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, தெப்பத் திருவிழா துவங்கியது.
தெப்பத்தில், உற்சவர் பெருமான் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு
அருள்பாலித்தார்.