பதிவு செய்த நாள்
14
டிச
2018
11:12
சபரிமலை: சபரிமலையில், வரும், 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து, தங்க அங்கி பவனி, 23-ம் தேதி காலையில் புறப்படுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல், தொடர்ச்சியாக, 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு நாளில், மண்டல பூஜை கொண்டாடப்படும்.வழிபாடு இந்த ஆண்டு மண்டல பூஜை, 27-ம் தேதி நடைபெறுகிறது. 1973-ல், திருவிதாங்கூர் மன்னர், சித்திரை திருநாள் வழங்கிய தங்க அங்கி, மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டல பூஜையன்றும், மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்.
கேரளா, பத்தணந்திட்டை மாவட்டம், ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டு உள்ள இந்த அங்கி, மண்டல பூஜைக்கு, நான்கு நாட்கள் முன்னதாக, பவனியாக எடுத்து வரப்படும். சபரிமலை போன்று வடிவமைக்கப்பட்ட ரதத்தில், அங்கி வைக்கப்பட்டு, வழிநெடுகிலும் பக்தர்களால் வழிபாடு செய்யப்படும். இந்த ஆண்டு, வரும், 23-ம் தேதி காலை, 6:30 மணிக்கு, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலிலிருந்து, பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது. 23-ல், ஓமல்லுார் பகவதி கோவிலில்; 24- - கோந்நி முருங்கமங்கலம் கோவில்; 25- - பெருநாடு சாஸ்தா கோவிலில் தங்கும் இந்த பவனி, 26-ம் தேதி மதியம், பம்பை வந்தடையும்.
தீபாராதனை: அங்கிருந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மூலவருக்கு, மாலை 6:30 மணிக்கு, தங்கஅங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள், 27 இரவு, 11:00 மணிக்கு நடை அடைக்கப் படும். மகரவிளக்கு கால பூஜைக்காக, 30-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது. 31ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்து, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் துவங்கும்.