பதிவு செய்த நாள்
17
டிச
2018
03:12
நாமக்கல்: நாமக்கல், அரங்கநாதர் கோவிலில் நாளை (டிச.,18) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, 54 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாமக்கல், மலைக்கோட்டையின் கிழக்கு பகுதியில் கி.பி.8ம் நூற்றாண்டில், அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவறை அரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இங்கு நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
காலை, 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, நித்யபூஜை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஆகம முறைப்படி பூஜை செய்து, 4:30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும். பக்தர் களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. நாமக்கல் பகுதியை சேர்ந்த சில பக்தர்கள் சேர்ந்து, 54 ஆயிரம் லட்டுகளை தயாரித்து பிரசாதமாக வழங்கவுள்ளனர். லட்டு தயாரிக்கும் பணி, கோவில் மண்டபத்தில் முழுவீச்சில் நடந்து வருகிறது. நாமக்கல் அருகே, மாரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயமணி, நடேசன், சுப்பிரமணி தலைமையில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.