பதிவு செய்த நாள்
10
ஜன
2019
01:01
பழநி:பழநி தைப்பூசவிழா பத்துநாட்கள் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது, 3,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பழநியாண்டவர் கலை -பண்பாட்டுக் கல்லுாரியில் தைப்பூசவிழா ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. சப்கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். கோயில் இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், தாசில்தார் சரவணக்குமார் டி.எஸ்.பி., விவேகானந்தன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயசேகர் முன்னிலை வகித்தனர்.
இணை ஆணையர்: பழநி இடும்பன்கோயில், சண்முகநதி பகுதியில் கழிப்பிடங்கள், ஷவருடன் குளியல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்களுக்காக 42 நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துதுறை அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்க வேண்டும். தென்னகரயில்வே ஜன.,18 முதல் 23 வரை சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். பக்தர்கள் புகார் தெரிவிக்க 24மணிநேர கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. சப்கலெக்டர்: இடும்பன்குளம், சண்முகநதி பகுதியில் குளிக்கும் பக்தர்களை கண்காணிக்க தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் விபத்தை தடுக்க அனைத்து இடங்களிலும் இரவு மின்விளக்குகள் எரிய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். சேதமடைந்த ரோடுகளை செப்பனிடவும், விபத்து பகுதிகளில் தடுப்புகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களுக்காக சண்முகநதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகர்: தற்போதே நகரில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. தைப்பூசவிழா நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.டி.எஸ்.பி., விவேகானந்தன்: கடந்த ஆண்டைபோலவே 2 எஸ்.பி.,க்கள் தலைமையில், ஊர்க்காவல்படை, பட்டாலியன், வெளிமாவட்ட போலீசார் என மொத்தம் 3,400 பேர் பாதுகாப்புபணியில் ஈடுபடுவர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வீடியோ எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜன.,19 முதல் 24வரை ஒட்டன்சத்திரம் - -பழநி ஒருவழிப்பாதையாக மாற்றப்படும், அதற்கு முன்னதாக ஜன., 13 முதல் சரக்கு வாகனங்கள் தொப்பம்பட்டி வழியாக திருப்பிவிடப்படும்.சப்கலெக்டர்: காஸ்சிலிண்டர் பயன்பாடு, தரமான அன்னதானம் குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிக்க வேண்டும். ஓட்டல்களில் விலை விபரப்பட்டியல் வைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, அனைத்து அரசு பஸ் டிப்போ மேலாளர்கள் இணைந்து கூட்டம் நடத்த வேண்டும். இடும்பன் குளத்தில் இன்று முதல் ரப்பர் படகுமூலம் கண்காணிக்க உள்ளதாக பழநி தீயணைப்புதுறை நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.