திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருவிழா மார்ச் 4ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2012 11:03
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா 4ம் தேதி ஆரம்பமாகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா தொடர்ந்து 16 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வரும் நான்காம் தேதி இரவு ஏழு மணிக்கு கொடியேற்றுடன் துவங்குகிறது. 19ம் தேதி வரை விழா தொடர்ந்து நடக்கிறது. திருக்கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் சார்பில் நடக்கவுள்ள விழாவின், ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 12ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று மாலை ஐந்து மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன், திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் தொட்டு இழுக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம். திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய நகராட்சி நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை துவக்கியுள்ளது. கோவிலை சுற்றி சிண்டேக்ஸ் டேங்குகள் வைத்து 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. சுகாதார பணிகளுக்காக கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். வெயிலின் தாக்கம் மற்றும் புழுதி புயலை கட்டுப்படுத்தும் விதமாக, கோவிலை சுற்றி டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்துவதென மாவட்ட போலீஸ் துறை முடிவுசெய்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.