வைணவ சம்பிரதாயம் நீடித்து வளர வேண்டியதற்கான சிறந்த ஏற்பாடுகளைச் செய்தவர் ராமானுஜர். வேத சாஸ்திர, ஆகம நெறி முறைகளின்படி கோயில் ஆராதனைகளை சீர்படுத்தி சட்ட திட்டங்களை வகுத்து, பல விதிமுறைகளையும் ஏற்படுத்தியவர். இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்திய அவர், "கோயில் ஒழுகு என்ற தம் நூலில் அதை ஆணித்தரமாகப் பதிவு செய்து வந்தார். அந்நூல் அவரது காலம் வரை முறையாகப் பராமரிக்கப்பட்டது. பிறகு கிழக்கு இந்தியக் கம்பெனியார் ஆட்சி புரிந்த போது திருச்சிராப்பள்ளியில் கலெக்டராக இருந்த வாலஸ்பிரபு என்பவர், "கோயில் ஒழுகு நூலை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிறந்ததொரு ஏடாகக் கருதினார். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து எழுதப்படாமல் இருக்கும் நிலையை எண்ணி வருந்தினார். அந்நூலின் மீது மிகுந்த அக்கறை கொண்டு தமது காலம் வரை அதில் தொடர்ச்சியாக எழுத வைத்து, அந்த ஏட்டைத் திரும்ப அதன் இடத்திலேயே பாதுகாப்பாக வைக்கச் செய்தார்.