அசோகவனத்தில், ராமரையே நினைத்தபடி அழுது கொண்டிருந்தாள் சீதை. அவளது பார்வை, குளவிக் கூடு ஒன்றிலிருந்து வெளிப்பட்ட குளவி ஒன்றின் மீது பட்டது. உடனே அவளது அழுகை அதிகமானது. அருகே இருந்த திரிசடை, ஆறுதல் சொல்லிவிட்டு, காரணம் கேட்டாள். ""கூட்டிற்குள் புழு வடிவில் போன குளவி, குளவியின் நினைவோடே உள்ளேயிருந்து குளவியாக மாறி விட்டது. அதுபோல, ராமரின் நினைவோடு எப்போதும் இருக்கும் நான், ராமராகவே மாறிவிட்டால், என் பதி, சீதைக்கு எங்கே போவார்? என நினைத்தேன். அழுதேன்! என்றாள், சீதை. ""இவ்வளவுதான்? ராமரையே நினைத்துக் கொண்டிருக்கும் நீ ராமராக மாறிவிட்டால், அங்கே உன்னையே நினைத்துக் கொண்டு இருக்கும் ராமர், சீதையாக (நீயாக) மாறிவிடுவார் அல்லவா...! அப்புறம் என்ன பிரச்னை? திரிசடை சொல்ல, ஆறுதல் அடைந்தாள் சீதை.