ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் நந்தவனத்தில் இருந்த பழமையான 100 மரங்கள் அடியோடு வெட்டப்பட்டன. கோயில்களில் குளுமை, துாய்மையான காற்றுக்காக முன்னோர்கள் கோயில் பிரகாரம், மதில் சுவர் இடையே மரங்கள் நட்டு நந்தவனம் உருவாக்கினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வடக்கு நந்தவனம், பழமையான வேம்பு, புளி, புங்கன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து வனம் போல் காட்சியளித்தது. நந்தவனத்தில் முள்செடிகளும் அடர்ந்திருந்ததால் அவற்றை அகற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவற்றுடன் சேர்த்து பழமையான 100 மரங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன. வெட்டப்பட்ட முள் செடிகளுக்கு தீவைத்ததில் மேலும் பல வேப்ப மரங்கள் கருகின.
பக்தர்கள் எதிர்ப்பு: நந்தவனமே அடையாளம் தெரியாத அளவிற்கு மரங்களை வெட்டியுள்ளனர். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட துணை தலைவர் சரவணன் கூறுகையில், ராமேஸ்வரத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு வந்ததே இல்லை. இதற்கு மரங்கள் தான் காரணம். நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி சாய்த்ததால் கோயிலுக்குள் வறண்டு வரும் தீர்த்த கிணறுகளுக்கு மேலும் சிக்கல் ஏற்படும். ஆன்மிக மரபு மீறி மரங்களை வெட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.