திருநள்ளார் நளன் குளம் புனிதத்தை காக்க கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2019 01:06
காரைக்கால்: திருநள்ளார் நளன் குளத்தில் புனித தன்மையை காத்திட பக்தர்கள் துணிகளை குளத்தில் விட்டு செல்ல தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சனி பரிகார ஸ்தலமான திருநள்ளார், சனீஸ்வரர் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவிற்கு லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், சனீஸ்வரரை தரிசிக்க செல்லும் முன் கோயில் எதிரில் உள்ள நளன் குளத்தில் நீராடி விட்டு தாங்கள் அணிந்த ஆடைகளை, நளன் குளக்கரையில் விட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
ஆனால், பக்தர்கள் குளத்தில் குளித்து முடித்த, தங்கள் ஆடைகளை குளத்திலேயே கழற்றி விடுவதால், குளத்தில் தண்ணீர் மாசுபடுகிறது.இதனால், கோயில் நிர்வாகம், வாரத்திற்கு ஒரு முறை குளத்தில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் நிலை ஏற்படுகிறது.
இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவல நிலை ஏற்படுகிறது.இதனால் கலெக்டர் விக்ரந்தராஜா மற்றும் கோயில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதில், நளன், குளத்தின் புனிதத்தை காத்திட வரும் ஜூலை 1ம் தேதி முதல் நளன் குளத்தில் துணிகளை பக்தர்கள் விட்டு செல்ல தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவை வரும் 1ம் தேதி முதல் செயல்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.