பெருவழிப் பாதையின் துவக்க தலம் எருமேலி. ஐயப்பன், எருமைத்தலை அரக்கி மகிஷியை கொன்ற தலம் இது. ஐயப்பன் மகிஷியை அழித்ததைக் கொண்டாடிய தேவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதைக் குறிக்கும் வகையில் பக்தர்களும் இவ்விடத்தில் நடனமாடுவர். இந்நிகழ்ச்சியை ‘பேட்டை துள்ளல்’ என்பர். உடலில் வண்ணப்பொடி பூசி, இலை, தழைகளை கட்டிக்கொண்டு, மரத்தாலான ஆயுதங் களுடன் மேளதாளம் முழங்க, “சாமி திந்தக்கத்தோம், ஐயப்பன் திந்தக்கத்தோம்!” என ஆடிப்பாடி பேட்டை சாஸ்தாவையும், ஐயப்பனின் நண்பரான வாபரையும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். அதன்பின், பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன் கட்டிய தர்மசாஸ்தா கோயிலுக்கு சென்று வழிபட்டு பெரு வழிப்பாதை பயணத்தை துவக்குகின்றனர்.