பதிவு செய்த நாள்
29
நவ
2019
10:11
கோட்டயம் :கேரளா மாநிலம் கோட்டயம் அருகே குமாரநல்லுார் தேவி கோயில் ஆண்டு திருவிழா டிச.,2ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருகார்த்திகை திருநாளான டிச.,10ல் மெகா அன்னதானம் நடக்கிறது. டிச.,2 மாலை 4:00 மணிக்கு தலைமைதந்திரி கிருஷ்ணன் நம்பூதிரி தலைமையில், தந்திரி அச்சுதன் நம்பூதிரி, மேல்சாந்தி நாராயணன் சிவதாஸ் முன்னிலையில் கொடியேற்றம் நடக்கிறது. அன்று மாலை 6:00 மணிக்கு கலைநிகழ்ச்சிகளை நடனக்கலைஞர் பாரீஸ் லட்சுமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து கலாசார மாநாடு நடக்கிறது. ஜோஸ் கே மாணி எம்.பி., திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பங்கேற்கின்றனர். தினமும் மாலையில் கலைநிகழ்ச்சிகள், கலாசார மாநாடு, கவியரங்கு, பஞ்சவாத்தியம் போன்றவை நடக்கின்றன. காலையிலும், மாலையிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. திருகார்த்திகை நாளான டிச., 10 அதிகாலை 2:00 மணிக்கு கார்த்திகை தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.
சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காலை 6:00 மணிக்கு அம்மன் ஆறாட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. காலை 9:00 மணி முதல் கோயில் வளாகத்தில் உள்ள தேவி விலாசம் ஆரம்ப பள்ளியில் மகா பிரசாதஊட்டு எனப்படும் மெகா அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது.பகல் 2:00 மணி வரை நடக்கும் இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். மாலை 5:30 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 11:30 மணிக்கு பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.அன்று காலை முதல் இரவு வரை கோயில் கலை அரங்கில் பல்வேறு இசை, கலாசார நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.டிச.,12 அதிகாலை 2:30 மணிக்கு அம்மன் ஆராட்டிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்த பிறகு, அதிகாலை 4:00 மணிக்கு திருக்கொடியிறங்குகிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.மேலும் விபரங்களுக்கு 0481- - 231 2737 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.