பதிவு செய்த நாள்
30
நவ
2019
01:11
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோயிலில், 39 ஆண்டுகள் ஆசி வழங்கி வந்த பெண் யானை வேதநாயகி, நோயுடன் போராடிய நிலையில், நேற்று (நவம்., 29ல்) அதிகாலை இறந்தது. ஆயிரக்கணக்கான மக்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு, 1980ல், மூன்றரை வயதான வேத நாயகி யானையை, ஊர் மக்கள் வாங்கி கொடுத்தனர். 2015ல், யானைக்கு, முதல் முறையாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கால்நடை மருத்துவர் குழுவின் தொடர் சிகிச்சையால், சிறிது உடல் நலம் தேறியது.
கடந்த, 10 நாட்களாக, வாய் மற்றும் கழுத்து, வலது முன்னங்கால் பகுதியில் நீர்க்கட்டு, வீக்கத்தால், எந்த உணவையும் உட்கொள்ளவில்லை. இதையடுத்து, யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு சென்று, உயரிய சிகிச்சை அளிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத் தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
விசாரித்த உயர் நீதிமன்றம், ‘யானைக்கு, மாவட்ட குழுவில் இடம் பெற்றுள்ள, வன உயிரின காப்பாளர், கால்நடை டாக்டர்கள் உரிய சிகிச்சை வழங்க வேண்டும்’ என நேற்று முன்தினம் (நவம்., 28ல்) உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று (நவம்., 29ல்) அதிகாலை 5:10 மணியளவில், வேதநாயகி யானை இறந்தது. பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், யானை உடலுக்கு அஞ்சலி செலுத்த, கண்ணீருடன் குவிந்தனர். கூடுதுறை சங்கமேஸ்வர் கோயில் கதவு பூட்டப்பட்டது.
பகல் 1:40 மணியளவில், பொக்லைன், இயந்திரத்தின் உதவியால், யானை உடல், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் வைக்கப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கூடுதுறை கோவில் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.