ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் உலா வரும் மாடுகளாலும், சுகாதாரக் கேடாக கிடப்பதால் பக்தர்கள் அருவருப்புடன் செல்கின்றனர்.
ஓராண்டில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் ஒரு கோடி பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிறகு, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுகின்றனர். புனித தீர்த்தமாக கருதி நீராடும் பக்தர்களுக்கு இலவசமாக தோல் நோய் பரவும் அபாயமும், பாதுகாப்பு இல்லாத நிலையும் உள்ளது.
அக்னி தீர்த்த கரையில் உலா வரும் 50 க்கும் மேற்பட்ட மாடுகள், அங்கு விற்கும் கீரைகளை பக்தர்கள் வாங்கி தானமாக கொடுக்கும்போது கீரையை உண்ணும் ஆவலில் வேகமாக ஓடும் மாடுகள், சில பக்தர்களை முட்டித் தள்ளுவதால் காயம் அடைகின்றனர். இதனால் மாடுகளை கண்டதும் பக்தர்கள் அலறியடித்து ஓடுகின்றனர்.
சுகாதாரக்கேடு: அக்னி தீர்த்த கரை அருகில் தேங்கிய கழிவு நீர், மாடுகழிவுகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் முகம் சுளித்தபடி நீராடுகின்றனர். இங்கு உலா வரும் கால்நடைகளை அகற்றி, சுகாதாரம் பராமரிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும், அதனை காற்றில் பறக்க விட்டு தீர்த்த கரையில் பரவலாக கிடக்கும் சுகாதாரக் கேடுகளால் பக்தர்கள் அதிருப்தி அடைகின்றனர்.