பதிவு செய்த நாள்
07
டிச
2019
12:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், பக்தர்கள் வசதிக்காக, 2 கோடி ரூபாய் செலவில், நடைபாதை அமைக்கும் பணி நடக்கிறது. காஞ்சிபுரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, அரசு, பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், ‘பிரசாத்’ திட்டத்தின் மூலம், இங்குள்ள கோவில்களுக்கு செல்லும் வழியில், நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஏற்கனவே, நான்கு ராஜவீதிகளில் நடைபாதைகள் அமைக்கப்பட்டன. அதை யாரும் பயன்படுத்துவது கிடையாது. இந்நிலையில், மேற்கு ராஜவீதி, இந்திரா சாலை, ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, எஸ்.வி.என்., பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில், 2 கோடி ரூபாய் செலவில், கிரானைட் கற்கள் பதித்து, நடைபாதை அமைக்கப்படுகிறது. நடைபாதையில் தடுப்பு கம்பிகள் பொருத்தப்பட இருக்கின்றன. இது குறித்து, சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவின் சில இடங்களில், ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்றிய பின், அந்த இடத்தில், நடைபாதை பணி துவங்கப்படும். இப்பணி முடிக்க, மூன்று மாதங்கள் ஆகும். இவ்வாறு, அவர் கூறினார்.