பதிவு செய்த நாள்
28
டிச
2019
11:12
குன்னுார்: குன்னுார் ஐயப்பன் கோவிலில், 53வது ஆண்டு மண்டல பூஜை விழாவையொட்டி தேர் ஊர்வலம் நடந்தது. கடந்த, 25ம் தேதி நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. சங்கர சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து கொடியேற்றம், திருவிளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தன. ஐயப்ப பக்தர்கள் பஜனை குழுவின் பஜனை இடம் பெற்றது.நேற்று முன்தினம் சூரிய கிரகணத்தை தொடர்ந்து காலை, 8:00 மணி முதல் 11:30 மணி வரை நடை அடைக்கப்பட்டது. விநாயகர் கோவிலிலிருந்து தீர்த்தகுடம் அபிஷேக பொருட்கள் ஐயப்பன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று ஐயப்பன் திருவீதி ஊர்வலம் நடந்தது.திருச்சூர் காவடி சிந்து குழுவினரின் உடுக்கையுடன் கூடிய ஆடல் பாடல் மற்றும் வயநாடு மேளத்துடன் அம்பல காவடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. தொடர்ந்து தேரில், உற்சவமூர்த்தி, புலி வாகனத்தில் ஐயப்பன் பவனி வந்து அருள் பாலித்தனர்.கோவிலில் புறப்பட்ட பஸ் ஸ்டாண்ட், சித்தி விநாயகர் கோவில், கேஸ் பஜார், டி.டி.கே., ரோடு, கிருஷ்ணாபுரம், வி.பி., தெரு, மவுண்ட் ரோடு வழியாக கோவிலை அடைந்தது. விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஐயப்ப பக்த சங்கத்தினர் செய்திருந்தனர்.