பதிவு செய்த நாள்
11
ஜன
2020
11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, ஆருத்ரா தரிசன விழாவில், மஹா தீப மை சுவாமிக்கு சாற்றப்பட்டு வழிபாடு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, சுவாமி சன்னதியிலிருந்து புறப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, கடந்த டிச., 10ல், 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட, மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, மஹா தீப மை பிரசாதம் முதலில் நடராஜர் மற்றும் சிவகாமிசுந்தரி அம்மனுக்கு சாற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பி, வழிபட்டனர். தொடர்ந்து, திருமஞ்சன கோபுர வாயில் வழியாக நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.