பதிவு செய்த நாள்
17
ஜன
2020
11:01
திருவண்ணாமலை: இல்லற வாழ்வில், ஊடலுக்கு பின் கூடல் என்பதை விளக்கும் வகையில், அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று திருவூடல் விழா நடந்தது. அருணாசலேஸ்வரரை நினைத்து தவமிருந்த பிருங்கி மகரிஷி, பராசக்தி அம்மனை வழிபட மறுத்ததால், அவருக்கு காட்சித்தர செல்லக்கூடாது என, பராசக்தி அம்மன் தடுக்க, அதையும் மீறி, அருணாசலேஸ்வரர் சென்றார். இதனால், இருவரிடையே ஏற்படும் திருவூடலை, சமாதானம் செய்ய, சுந்தரமூர்த்தி நாயனார் ஈடுபடுவார். இதில், இருவரும் சமாதானம் அடையாத நிலையில், அருணாசலேஸ்வரர் பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்க செல்லும் விழா, நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அருணாசலேஸ்வரர் நேற்றிரவு, குமரக்கோவிலில் தங்கி, இன்று கிரிவலம் சென்று, பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுப்பார். பின்னர் செல்லும் வழியில், கொள்ளையர்களிடம் நகையை பறிகொடுக்கும் நிகழ்வு நடக்கும். இதைத்தொடர்ந்து இன்றிரவு, மறுவூடல் விழா நடக்கும். இந்த நிகழ்ச்சியை இதை காணும் தம்பதியினரிடையே, ஒற்றுமை பலப்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.