அந்த வைணவரின் குரல் கேட்டு பிள்ளைலோகாச்சார்யாரும், மணப்பாக்கத்து நம்பியும் ஏறிட்டு பார்த்தனர். ‘‘சுவாமி... காவிரி்க் கரையிலும், கொள்ளிடக் கரையிலும், டெல்லி சுல்தானின் படைகள் முகாமிட்டுள்ளன. புனிதக் காவிரியில் அவர்கள் குதிரைகளை குளிப்பாட்டி சுத்தப்படுத்துகின்றனர். கேள்வி கேட்டால் சிகையை வாளால் வெட்டுவதோடு, உயிரையும் பறிப்போம் என எச்சரிக்கின்றனர்’’ என்றார். பிள்ளைலோகாச்சார்யார் மனம் சலனம் அடைந்தது. அப்போது தான் வேதாந்த தேசிகன் எச்சரிக்கை செய்த விஷயம் மணப்பாக்கத்து நம்பியின் நினைவுக்கு வந்தது. அதுவரை அமைதியாக இருந்த சத்சங்கம், அந்த நொடி முதல் சஞ்சலம் மிக்கதாக மாறியது. சுல்தானின் படைகள் முகாமிட்டதை கூறிய வைணவர் மேலும் தொடர்ந்தார். ‘‘சுவாமி...மலைக்கோட்டையை சுற்றிலும் கூட சுல்தான் படை வீரா்களின் நடமாட்டம் தானாம். சுற்றுவட்டாரத்தில் இருந்து வருவோர் சுங்கம் செலுத்தி விட்டுத் தான் ஊருக்குள் நுழைய முடியும்! நாம் பயணத்திற்காக எல்லை தாண்டினால் கூட சுங்கம் செலுத்த வேண்டுமாம்... இப்படி இருந்தால் எப்படி குணசீலம், கும்பகோணம், தஞ்சாவூருக்கு நாம் போக முடியும்? எனக் கேட்டார். மணப்பாக்கத்து நம்பி உணர்ச்சிப்பிழம்பாகி வெடித்தார். ‘‘இது அநியாயம், அக்கிரமம்... இவர்கள் யார் நமக்கு வரி விதிக்க?’’ ‘‘இந்த பரத கண்டம் இனி அவர்களின் வசமாம். இதன் அரசன் எவ்வழியோ அவ்வழி குடிகள் செல்ல வேண்டுமாம்...’’ ‘‘ அவன் வழி எதுவென்றே நமக்கு தெரியாதே?’’ ‘‘அவன் சொல்வதுபடி நடந்தால் போதுமாம் அந்த வழி தெரிந்து விடுமாம்’’ ‘‘கேட்காவிட்டால் கசையடி, உணவும் கிடைக்காது பட்டினியால் இறக்க நேரிடும்’’ ‘‘பிச்சை கேட்டு வாழ்வதற்கு இறப்பது மேல்’’ ‘‘இது என்ன கேட்பார் இல்லாத தேசமா?’’ அங்கே பெரும் விவாதம் எழுந்தது. பிள்ளைலோகாச்சார்யார் அரங்கன் சன்னதி நோக்கி நடந்தார். நம்பி பின்தொடர்ந்தார். வழியில் பேச முயன்ற போது நம்பியைத் தடுத்த பிள்ளைலோகாச்சார்யார் உதட்டில் கைவைத்து ‘மவுனமாக வா’ என்றார். ஸ்ரீரங்கத் தெருக்களில் அமைதி நிலவியது. பல்லக்குகள், தேர்கள், காளைகள் பூட்டிய திறப்பு வண்டிகள் என பலவும் போய் வந்த வண்ணம் இருக்கும்! சத்திரங்களுக்கு வெளியில் தர்மம் பெற பலரும் காத்திருப்பர். அங்கு பயணிகள் தங்கியிருப்பர். ஒட்டகங்கள் கண்ணில் பட்டால் வடமேற்கில் இருந்து வந்திருப்போர் அதிகம் என்று பொருள். அலங்கரிக்கப்பட்ட காளைகளோடு, சித்திரவேலைப்பாடு கெண்ட துணிகளால் ஆன தொங்கு குழாய்களும், கொடிகளும் கண்ணில் பட்டால் தென்மேற்கில் இருந்து வந்திருப்பவர்கள் என்று பொருள். இவர்களுக்கு நடுவில் மொழி பெயர்க்கும் துபாஷிகள் பயணிகளுக்கு வழிகாட்ட காத்திருப்பர். ஊர்க்காவல் படைவீரர்கள், வேத விற்பன்னர்கள் என ஊரே திமிலோகப்படும். ஆனால் இன்றோ ஊரே வெறிச்சோடி இருந்தது. சுல்தானின் படைவீரர்கள் சிலர் குதிரைகளில் விரைந்து சென்றனர். சிலர் முறைத்த படியும், காலால் எட்டி உதைப்பதுமாக அராஜகத்திலும் ஈடுபட்டனர். பிள்ளைலோகாச்சார்யார் அதை பார்த்தபடி நடந்தார். நம்பிக்கு ரத்தம் கொதித்தது. வடக்கு கோபுர வாசல் வழியாக நுழைந்த போது அங்கு ஆட்கள் இல்லை. பிள்ளைலோகாச்சார்யார் அரங்கன் சன்னதி முன் நின்றார். வாயிலில் அர்ச்சகர் மட்டும் சோகமாக நின்றிருந்தார். ‘‘அர்ச்சகரே..யாரும் வரவில்லையே என்ற ஆத்திரமா? இல்லை ஆதங்கமா?’’ ‘‘எதிர்காலத்தை எண்ணிய கலக்கம்... சுவாமி’’ "கலக்கமா...அரங்கனிடம் பணியாற்றுபவருக்கா?" ‘‘நானும் மனிதன் தானே? முற்றிலும் நம் வழிபாட்டை தன் வழிபாடாக மாற்ற நினைத்திடும் காலமாக அல்லவா உள்ளது’’ ‘‘ நீங்களே துவண்டால் அரங்கன் ஆபத்துக்கு உதவ மாட்டான் என்றாகாதா?’’ ‘‘நீங்கள் சொல்வது உண்மை. எங்கே அவன் உதவினான்? அவன் உதவியிருந்தால் அந்நியர் கூட்டம் வந்திருப்பார்களா?’’ ‘‘ நம்பிக்கை இழந்து விட்டீர்களா?’’ ‘‘ அந்த பொருளில் சொல்லவில்லை... ஏதாவது அதிசயம் நடக்காதா, இவர்கள் துரத்தப்பட மாட்டார்களா என தவித்துக் கொண்டிருக்கிறேன்’’ ‘‘அதிசயம் ஏதும் நடக்காது.... அதை நாம் எதிர்பார்ப்பது கூட சரியில்லை. அமைதியாக இருங்கள். இதுவரை நடந்த எல்லாமும் நன்றாகவே நடந்தது. இனி நடப்பதும் அப்படியே! பயம் வேண்டாம்’’ ‘‘எந்த நம்பிக்கையில் இப்படி சொல்கிறீர்கள்? மதுரையில் பாண்டிய அமைச்சரவையை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. கொல்லப்பட்டார்களா இல்லை, உயிருக்கு பயந்து ஓடி விட்டார்களா தெரியவில்லை. சோழத்திலும் அதே நிலை தான்! புதிய கொடி, புதி்ய ஆட்சி, புதிய நிர்வாகம், புதிய கொள்கைகள் என ஊரெங்கும் இதே பேச்சு தான்.’’ ‘‘ பேசட்டுமே? நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடுமா?’’ ‘‘ உங்களுக்கு நடப்பு காலத்தின் மீது எந்த வருத்தமும் இல்லையா...?’’ "நிறைய இருக்கிறது. எம்பெருமான் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையும் உள்ளது...’’ ‘‘கைவிடமாட்டானா... அப்படியானால் இப்போது நடப்பதெல்லாம் என்ன?’’ ‘‘ பெரிதாக என்ன நடந்து விட்டது?’’ ‘‘வடக்கில் பெரும் கொலையும், கொள்ளையும் சாதாரணமாக நடக்கிறதாம்... கோயில்கள் இடிக்கப்படுகின்றன! கோயில் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன! சிலைகள் உடைக்கப்படுகின்றன! புகழ் பெற்ற கோயில்கள் அழிக்கப்பட்டு விட்டன. அங்கே தொடங்கிய இந்த அழிவு இங்கும் வந்து விட்டது. இப்போது படை மட்டும் வந்துள்ளது. அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் இன்னும் வரவில்லை. அவர்கள் வந்தபடி இருக்கிறார்களாம். அப்படி அவர்கள் வந்தால் என்னாகும் என்றே என்னால் கற்பனை செய்ய முடியவில்லை’’ ‘‘எதுவும் ஆகாது.. நாம் பக்தி, ஒற்றுமையால் சகலத்தையும் வெற்றி கொள்வோம். கவலை வேண்டாம்’’ ‘‘எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்? உயிருக்கு பயந்து தினமும் கோயிலுக்கு வருபவர்கள் கூட வரவில்லை’’ பிள்ளைலோகாச்சார்யார் சிறிதும் தளரவில்லை.