மதுரை மன்னன் ராஜசேகர பாண்டியன், பரதக்கலையைத் தவிர மற்ற எல்லா கலைகளையும் கற்றவன். ஒருமுறை ஆடல் கலையில் சிறந்த ஒருவன் பாண்டியனிடம் பரிசில் பெற்றான். அப்போது அவன், ஆடல் கலையைப் பயிலாக உனக்கு எண்ணெண் கலைவல்லான் (அறுபத்து நான்கு கலைவல்லான்) என்ற பெயர் பொருத்தமில்லை என்று பாண்டியனை இகழ்ந்தான். அதனால் பாண்டியன், இறைவன் ஆடும் அற்புத பரதக் கலையையும் பயின்றான். அப்போது, ஒரு காளை ஊன்றி மற்றொரு காளை வளைத்து ஆடியபோது, பாதங்களும் உடலும் நோவதை உணர்ந்தான்.
சிறிது நேரம் ஆடும் தமக்கே இத்தனை வலியென்றால், சகல ஜீவன்களுக்காக எந்நேரமும் வெள்ளியம்பலத்தில் கால் ஊன்றி நின்றிருக்கும் எம்பெருமானுக்கு எப்படி வலிக்கும் என்று பெரிதும் வருந்தினான். பக்தனின் வருத்தத்தை ஈசன் உணர்ந்தார். உடனே ஆடினார். ஆம், வெள்ளியம் பலத்தில் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் காண ஆடிக் கொண்டிருந்த கூத்தினை விடுத்துப் புதுமையாக பாதம் மாற்றி வேகமாக அதிரவீசி ஆடினார். இந்தக் கூத்தினைக் கண்ட பாண்டியன் ஆனந்தம் அடைந்தான். அவனின் வேண்டுதலுக்காக வெள்ளியம்பலத்தான் அப்படியே கால் மாறி நின்றார். இப்படி பாண்டியனுக்காக மாறியாடிய சொக்கருக்கு அதிரவீசியாடுவார், மாறியாடிக் கொடியிட்ட பெருமாள் என்ற பெயர்களும் உண்டாயின.