பதிவு செய்த நாள்
07
பிப்
2020
11:02
வீரபாண்டி: தைப்பூச திருவிழாவையொட்டி, தேர் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. சீரகாபாடி, சுப்ரமணியர் கோவிலில், தைப்பூச திருவிழா, கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை, விநாயகர் பூஜையுடன், மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், மாரியம்மன் கோவிலில் தொடங்கி, மலைக்கோவிலை வந்தடையும். அங்கு, யாகசாலை, மாங்கல்ய பூஜை முடிந்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியருக்கும், ஸ்ரீதேவி, பூதேவியருடன், சென்னகேசவ பெருமாளுக்கும், சிவாச்சாரியார்களால், திருமணம் நடத்தி வைக்கப்படும். நாளை, தேரோட்டம் நடக்கவுள்ளது. அதற்காக, மாரியம்மன் கோவில் திடலில், விநாயகர், சுப்ரமணியர், சென்னகேசவ பெருமாளுக்கு, மூங்கில், சவுக்கு, வைக்கோல் புற்களால் தேர் கட்டும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக, மற்ற தேர்களை போல் இல்லாமல், வெறும் மூங்கில், சவுக்கு கட்டைகளை, வைக்கோலால் கட்டி, இரு மாட்டு வண்டிகளுக்கு மத்தியில், நீளமான தேக்கு மரத்தின் மீது கட்டப்பட்ட தேரை இணைத்து, வடம் அமைத்து, பக்தர்களால் இழுத்து வரப்படும் படி தயார் செய்யப்படுகிறது. அன்று மாலை, 4:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மூன்று தேர்களில், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் சுவாமிகளை எழுந்தருளச்செய்வர். இரவு, 7:00 மணிக்கு, தேரோட்டம் நடக்கும். நாளை மறுநாள் இரவு, சத்தாபரணம், பிப்., 10ல் கொடி இறக்குதல், 11ல் மஞ்சள் நீராட்டுதலுடன், தைப்பூச திருவிழா நிறைவடையும்.