மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காலையில் நீராடி சிவநாமம் ஜெபித்து நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். பகலில் உணவு உண்ணாமலும், இரவில் தூங்காமலும் விரதம் இருக்க வேண்டும். பட்டினி விரதம் இருக்க இயலாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். பகலில் சிவாயநம, நமசிவாய என்னும் மந்திரங்களை ஜெபிப்பது நன்மையளிக்கும். தேவாரம், திருவாசகம் மற்றும் பன்னிரு திருமுறை பாடல்களை பக்தியுடன் பாடலாம். இரவில் சிவன் கோவிலில் நடக்கும் நான்கு கால அபிஷேகத்தை தரிசித்து மறுநாள் காலையில் அன்னதானம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விரதம் மேற்கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியமும் உண்டாகும். சிவராத்திரி விரத மகிமை: விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும். மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.